“பந்து வீச்சாளர்களால் தான் கேப்டன்ஷிப்பில் சாதிக்க முடிந்தது” - கோலி பேட்டி


“பந்து வீச்சாளர்களால் தான் கேப்டன்ஷிப்பில் சாதிக்க முடிந்தது” - கோலி பேட்டி
x
தினத்தந்தி 4 Sep 2019 12:28 AM GMT (Updated: 4 Sep 2019 12:28 AM GMT)

பந்து வீச்சாளர்களால் தான் கேப்டன்ஷிப்பில் சாதிக்க முடிந்தது என கேப்டன் விராட் கோலி கூறினார்.

கிங்ஸ்டன்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-

டெஸ்டில் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் என்ற சாதனையை படைத்து இருப்பது குறித்து கேட்கிறீர்கள். நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், ‘கேப்டன்’ என்பது பெயருக்கு முன்பாக இருக்கும் ஒரு வார்த்தை அவ்வளவு தான். இது எல்லாமே கூட்டு முயற்சிக்கு கிடைத்த பரிசு ஆகும். திறமையான அணி கிடைத்ததால் தான் இச்சாதனையை உருவாக்க முடிந்தது. சிறந்த பந்து வீச்சாளர்கள் இல்லாவிட்டால் இத்தகைய வெற்றிகள் சாத்தியமில்லை.

நாம் விருப்பம் போல் எவ்வளவு ரன்கள் வேண்டும் என்றாலும் குவிக்கலாம். ஆனால் பந்து வீச்சாளர்களின் அயராத உழைப்பு இல்லாவிட்டால் சாதகமான முடிவு கிடைக்காது. அதாவது இந்த டெஸ்டில் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் அபாரமான பந்து வீச்சைத்தான் சொல்கிறேன். எனவே எல்லா சிறப்பும் ஒட்டுமொத்த அணியினரையே சாரும்.

ஹனுமா விஹாரி இந்த தொடரில் கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த கண்டுபிடிப்பு. சவாலான இந்த ஆடுகளத்தில், அதுவும் நெருக்கடிக்கு மத்தியில் விஹாரி பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. அவர் பேட்டிங் செய்த போது, நாங்கள் ஓய்வறையில் உண்மையிலேயே அமைதியாக அவரது ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த அளவுக்கு சூழ்நிலைக்கு தகுந்தபடி கச்சிதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். தனது பேட்டிங் திறனை எப்போதும் மேம்படுத்திக் கொள்ள அவர் விரும்புகிறார். அதே போல் தவறுகளை சுட்டிக்காட்டினால் அதை உடனடியாக திருத்திக் கொள்கிறார். களத்தில் எல்லா வகையிலும் முழுமுயற்சியை வெளிப்படுத்துகிறார். அதனால் தான் அவரை அணிக்கு தேர்வு செய்துள்ளோம்.

பும்ரா போன்ற பந்து வீச்சாளர் எங்கள் அணிக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும். முதலில் 20 ஓவர் கிரிக்கெட்டுக்குரிய சிறப்பு வாய்ந்த பவுலராக அடையாளம் காணப்பட்டார். அதன் பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் கவனத்தை ஈர்த்தார். இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டையும் தனது கட்டுக்கோப்பான பந்து வீச்சால் ஆக்கிரமித்துள்ளார். இன்ஸ்விங், அவுட் ஸ்விங், அதிவேகம், பவுன்சர் என்று விதவிதமாக பந்து வீசி பேட்ஸ்மேன்களை குழப்புகிறார். இப்போது உலகின் மிகவும் நிறைவான ஒரு பந்து வீச்சாளராக பும்ரா திகழ்கிறார். இவ்வாறு கோலி கூறினார்.


Next Story