தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 502 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தல்


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 502 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தல்
x
தினத்தந்தி 3 Oct 2019 10:45 AM GMT (Updated: 3 Oct 2019 9:36 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி மயங்க் அகர்வாலின் இரட்டை சதத்தின் உதவியுடன் 502 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

விசாகப்பட்டினம்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி மயங்க் அகர்வாலின் இரட்டை சதத்தின் உதவியுடன் 502 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

டெஸ்ட் கிரிக்கெட்

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க நாளில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் சேர்த்து மலைக்க வைத்தது. ரோகித் சர்மா 115 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முதல் நாளில் தேனீர் இடைவேளைக்கு பிறகு மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் 30 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நீடித்தது. ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் துரிதமான ரன் சேகரிப்பில் கவனம் செலுத்தினர். சுழற்பந்து வீச்சை சிரமமின்றி அடித்து நொறுக்கினர். 125 ரன்னில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த ரோகித் சர்மா தொடர்ந்து வேகம் காட்டினார். மறுமுனையில் மயங்க் அகர்வால் தனது முதலாவது சர்வதேச சதத்தை நிறைவு செய்தார். காலைப்பகுதியில், இவர்களுக்கு எதிராக தென்ஆப்பிரிக்க பவுலர்களால் ஒரு மெய்டன் கூட வீச முடியவில்லை. எதிரணி பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இந்த கூட்டணியை ஒரு வழியாக சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் பிரித்தார்.

ரோகித் சர்மா 176 ரன்

மகராஜின் பந்து வீச்சில் சிக்சர், பவுண்டரி விரட்டிய ரோகித் சர்மா அவரது அடுத்த பந்தை நேராக அடிக்க முற்பட்ட போது ஏமாந்து ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ரோகித் சர்மா 176 ரன்களில் (244 பந்து, 23 பவுண்டரி, 6 சிக்சர்) வெளியேறினார். ரோகித்-அகர்வால் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 317 ரன்கள் (82 ஓவர்) சேர்த்தது சிறப்பம்சமாகும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு விக்கெட்டுக்கு 300 ரன்களுக்கு மேல் திரட்டிய முதல் இந்திய ஜோடி என்ற மகிமையையும் பெற்றனர்.

இதன் பின்னர் மயங்க் அகர்வால் நிலைத்து நின்று விளையாட இன்னொரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தன. புஜாராவுக்கு 6 ரன்னில், பிலாண்டர் வீசிய பந்தில் ஆப்-ஸ்டம்பு கழன்றது. அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 20 ரன்னில் (40 பந்து, 4 பவுண்டரி) சுழற்பந்து வீச்சாளர் செனுரன் முத்துசாமியின் பந்து வீச்சில் அவரிடமே பிடிபட்டு அதிர்ச்சிக்குள்ளானார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட முத்துசாமியின் முதல் சர்வதேச விக்கெட் இதுவாகும்.

மயங்க் அகர்வால் இரட்டை சதம்

அடுத்து துணை கேப்டன் அஜிங்யா ரஹானே, மயங்க் அகர்வாலுடன் இணைந்தார். இரட்டை சதத்தை நெருங்கிய அகர்வால் 186 ரன்னில் இருந்த போது தைரியமாக மகராஜின் பந்து வீச்சில் ஒரு சிக்சரை பறக்கவிட்டார். சிறிது நேரத்தில் அவர் தனது இரட்டை செஞ்சுரியை எட்டினார். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை பரவசப்படுத்திய அகர்வால் 215 ரன்களில் (371 பந்து, 23 பவுண்டரி, 6 சிக்சர்) டீன் எல்கர் வீசிய புல்டாஸ் பந்தை வளைத்துபிடித்து அடித்த போது டேன் பீட்டிடம் கேட்ச் ஆனார்.

ரன்வேகத்தை உயர்த்தும் முனைப்புடன் பேட்டிங் செய்த ரஹானே (15 ரன்), ஹனுமா விஹாரி (10 ரன்), விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா (21 ரன்) அதிக நேரம் நிலைக்கவில்லை.

இந்தியா 502 ரன்

இந்திய அணி முதல் இன்னிங்சில் 136 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 502 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. ரவீந்திர ஜடேஜா 30 ரன்னுடனும், அஸ்வின் ஒரு ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா இந்திய சுழலில் திணறியது. தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ராம் (5 ரன்) அஸ்வின் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து வந்த தேனிஷ் டி புருனும் (4 ரன்) அவரது பந்து வீச்சுக்கே இரையானார். விக்கெட் தடுப்பாளராக அனுப்பப்பட்ட டேன் பீட்டை (0) ஜடேஜா காலி செய்தார்.

தென்ஆப்பிரிக்கா தடுமாற்றம்

ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 39 ரன்களுடன் தடுமாறிக்கொண்டிருந்தது.

463 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் தென்ஆப்பிரிக்க அணி 3-வது நாளான இன்று தொடர்ந்து பேட்டிங் செய்யும்.

Next Story