தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி
x
தினத்தந்தி 6 Oct 2019 9:07 AM GMT (Updated: 6 Oct 2019 7:51 PM GMT)

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

விசாகப்பட்டினம்,

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்களுக்கு 502 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால்  215 ரன்களும், ரோகித் சர்மா 176 ரன்களும் விளாசினர். 

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி 431 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டீன் எல்கர் 160 ரன்களும், குயின்டான் டி காக் 111 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் பின் தனது 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 323 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 127 ரன்களும், புஜாரா 81 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற 395 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  

பின்னர் 395 ரன்கள் இலக்குடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி, இந்திய அணியின் அபார பந்து வீச்சால் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டேன் பீட் 56 ரன்களும், செனுரன் முத்துசாமி 49 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் முகமது சமி 5 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.


Next Story