கொல்கத்தாவில் நாளை தொடங்கும் பகல்-இரவு டெஸ்டில் பிங்க் நிற பந்தின் தாக்கம் எப்படி இருக்கும்?


கொல்கத்தாவில் நாளை தொடங்கும் பகல்-இரவு டெஸ்டில் பிங்க் நிற பந்தின் தாக்கம் எப்படி இருக்கும்?
x
தினத்தந்தி 20 Nov 2019 11:57 PM GMT (Updated: 20 Nov 2019 11:57 PM GMT)

நாளை தொடங்கும் பகல்-இரவு டெஸ்டில் பிங்க் நிற பந்தின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட்டை தற்போது இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க் பால்) ஜூரம் ஆட்டுவிக்கிறது. முதல்முறையாக பிங்க் நிற பந்தில் விளையாடப்போவதை நினைத்து நமது வீரர்கள் பரவசமடைந்து இருக்கிறார்கள்.



 


  இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி பதவி ஏற்றதும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு அச்சாரம் போட்டார். கேப்டன் விராட் கோலியிடம் 3 வினாடிகளில் சம்மதம் வாங்கிக் கொண்ட அவர் அதன் பிறகு வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தையும் ஒப்புக் கொள்ளச் செய்தார். கங்குலியின் பதவி காலத்தில் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடப்போகும் ஒரே டெஸ்ட் தொடர் இது தான். அதனால் தான் இந்த தொடரிலேயே பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு ஏற்பாடு செய்து வரலாற்றிலும் இடம் பிடித்து விட்டார்.



 


  இந்தியா-வங்காளதேசம் மோதும் இந்த பகல்-இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. ஏறக்குறைய 5 ஆயிரம் வங்காளதேச ரசிகர்களும் இந்த போட்டியை பார்க்க வருகை தர உள்ளனர்.

இந்த போட்டி தொடர்பான சில சுவையான அம்சங்களை பார்க்கலாம்.

* பிற்பகல் 12.30 மணிக்கு ‘டாஸ்’ போடப்படும். ராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவினர் பறந்து வந்து பிங்க் பந்தை இரு அணி கேப்டன்களிடமும் வழங்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

*பிற்பகல் 1 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்டில் 3 மணி முதல் 3.40 மணி வரை உணவு இடைவேளையும், மாலை 5.40 மணி முதல் 6 மணி வரை 20 நிமிடங்கள் தேனீர் இடைவேளையும் விடப்படும்.

*“இந்த ஆடுகளத்தில் (பிட்ச்) வழக்கமாக 4 மில்லிமீட்டர் அளவுக்கு புற்கள் விடுவோம், ஆனால் இது பகல்-இரவு போட்டி என்பதால் 6 மில்லிமீட்டர் அளவுக்கு புற்கள் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்கிறோம். இது பிங்க் பந்தின் பளபளப்பை நீண்ட நேரம் தக்க வைக்க உதவும்” என்று கொல்கத்தா ஆடுகள பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜி கூறியுள்ளார். இந்தூர் ஆடுகளத்தை ஒப்பிடும் போது இது உயிரோட்டமாக இருக்கும். பந்து நன்கு பவுன்ஸ் ஆகும் என்றும் குறிப்பிட்டார்.

* இந்த போட்டியில் பனிப்பொழிவின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. குளிர் காலம் என்பதால் கொல்கத்தாவில் மாலை 4 மணிக்கெல்லாம் சூரியன் மறையத் தொடங்கி விடுகிறது. அதனால் இந்த டெஸ்டின் கடைசி கட்ட பகுதியில் (தேனீர் இடைவேளைக்கு பிறகு) பனிப்பொழிவு பிரச்சினை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பனி அதிகமாக பொழிந்தால் பந்தை பிடித்து வீசுவதில் ‘கிரிப்’ கிடைக்காமல் பவுலர்கள் தடுமாற்றத்திற்கு உள்ளாவார்கள். இதனால் பனியின் தாக்கத்தை முடிந்தவரை குறைக்க ‘ஸ்பிரே’ அடிக்கப்படும்.

* பகல் நேர டெஸ்ட் போட்டியில் உபயோகப்படுத்தப்படும் சிவப்பு நிற பந்தை இரவில் தெளிவாக பார்ப்பதில் சிரமம் இருக்கிறது. அதனால் தான் பகல்-இரவு டெஸ்டுக்கு பிரத்யேகமாக மிளிரும் தன்மை கொண்ட பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு மற்றும் பிங்க் பந்துக்கு இடையே ஒரே ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால் பிங்க் பந்து கருப்பு நூலால் பிணைக்கப்பட்டிருக்கும். சிவப்பு நிற பந்தில் வெள்ளை நூல் பயன்படுத்தப்படுகிறது. இந்த பந்தின் மீது கூடுதலாக அரக்கு பூசப்படுவதால் பளபளப்பு அதிகரிக்கும். மேல்பகுதியில் ஈரப்பதம் ஒட்டாது. இதனால் பிங்க் பந்து அதிகமாக ‘ஸ்விங்’ ஆகும் என்பது பெரும்பாலான வீரர்களின் கருத்தாகும்.

* இறக்குமதி செய்யப்பட்ட தோல் மற்றும் கார்க், ரப்பர் மூலம் பிங்க் பந்து தயாரிக்கப்படுகிறது. சர்வதேச தரத்திலான ஒரு பந்தை தயாரிக்க 8 நாட்கள் வரை ஆகிறது. இந்த டெஸ்டுக்கு எஸ்.ஜி. நிறுவனத்தின் பந்து சப்ளை செய்யப்படுகிறது. பந்தின் இணைப்பு பகுதியில்(சீம் பகுதி) கையால் தையல் போடப்பட்டிருப்பது கூடுதல் விசேஷமாகும். அந்த நிறுவனம் ஏறக்குறைய 100 பிங்க் பந்துகளை பயிற்சிக்காக வழங்கியுள்ளது.

*சூரியன் மறையும் சமயத்தில் பிங்க் பந்தை எதிர்கொள்வதில் பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். பந்து சரியாக தெரியவில்லை என்று பேட்ஸ்மேன்கள் நடுவரிடம் புகார் செய்தால், முன்கூட்டியே மின்னொளி எரியவிடப்படும்.



 



  ‘எந்த நிற பந்திலும் மிரட்டக்கூடியவர் ஷமி’ - -விருத்திமான் சஹா

வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தற்போது இருக்கும் பார்மில் பிங்க் பந்து என்ன எந்த பந்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். குறிப்பாக முகமது ஷமி எந்த ஆடுகளத்திலும் அபாயகரமான பவுலராக உருவெடுக்கக்கூடியவர். அவரது வேகமும், பந்தை ரிவர்ஸ்விங் செய்யும் திறமையுமே அதற்கு சான்று. களத்தில் பிங்க் பந்தின் நகரும் தன்மை எப்படி இருக்கும் என்பதை இன்னும் நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் எங்களது பவுலர்களின் உத்வேகம், ஆட்டத்திறனுக்கு முன் பந்தின் நிறம் ஒரு பிரச்சினையே இல்லை. வெளிச்சம் மங்கும் நேரத்தில் பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக அமையும். எது எப்படி என்றாலும் இந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். பிங்க் பந்தின் மினுமினுப்பை பார்க்கும்போது, ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆவதற்கு வாய்ப்பு குறைவு தான். இவ்வாறு சஹா கூறினார்.


 




  ‘20 ஓவர் போட்டி போன்று உணர்வார்கள்’ - வெட்டோரி

வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிங்க் பந்து, பகல்நேரத்தில் வழக்கமான போட்டிக்குரிய தன்மையுடன் தான் இருக்கும். மின்னொளியின் கீழ் தான் சவாலாக இருக்கும். இங்கு (கொல்கத்தா) சூரியன் தற்போது சீக்கிரமாகவே அஸ்தமனம் ஆகி விடுகிறது. இந்த நேரத்தில் பிங்க் பந்தின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். பிங்க் பந்து போட்டியை டி.வி.யில் பார்த்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். அந்தி பொழுதில் இரு அணிகளும் தங்களது யுக்திகளில் சில மாற்றங்களை செய்ய முயற்சிப்பார்கள். அதன் பிறகு போட்டியை பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கும்.

முந்தைய பகல்- இரவு டெஸ்ட் போட்டிகளை புரட்டிப்பார்த்தால் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லை என்பது தெரியும். ஆனாலும் சுழற்பந்து வீச்சாளர்களால் பகல் நேரத்தில் கணிசமான பங்களிப்பை அளிக்க முடியும். பிங்க் பந்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமான ஒன்றாக இருக்கப்போகிறது.

அதிகமான ரசிகர்களை கொண்டு வரக்கூடிய போட்டியாக இருப்பதால் இதை நாம் பாராட்டியாக வேண்டும். மைதானம் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் போது, கிட்டத்தட்ட 20 ஓவர் அல்லது ஒரு நாள் போட்டிக்குரிய சூழலே நிலவும்.

விராட் கோலியோ அல்லது ரோகித் சர்மாவோ பேட்டிங் செய்ய இறங்கும் போது இதை 20 ஓவர் போட்டி போன்று உணருவார்கள். இவ்வாறு வெட்டோரி கூறினார்.



Next Story