வங்காளதேசத்துக்கு எதிரான பகல் - இரவு டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா


வங்காளதேசத்துக்கு எதிரான பகல் - இரவு டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா
x
தினத்தந்தி 23 Nov 2019 3:52 PM GMT (Updated: 23 Nov 2019 3:52 PM GMT)

வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

கொல்கத்தா,

இந்தியா- வங்காளதேசம் அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி பங்கேற்கும் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் சிறப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்தப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 30.3 ஓவர்களில் 106 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.  

கேப்டன் விராட் கோலியின் (136 ரன்கள்) அபார சதம் , புஜாரா (55 ரன்கள்),  ரகானே (51 ரன்கள்) ஆகியோரின் அரைசதம் ஆகியவற்றால், இந்திய அணி வலுவான நிலையை எட்டியது. இந்திய அணி 89.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்திருந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.  

 இதையடுத்து, 246 ரன்கள் பின்னடைவுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய வங்காளதேச அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 13 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து வங்காளதேச அணி தத்தளித்தது.  முஷ்புகிர் ரஹீம், மெகமதுல்லா இணை ஓரளவு நிலைத்து ஆடி, விக்கெட் சரிவை தடுத்தது. மெகமதுல்லா 39 ரன்கள் எடுத்திருந்த போது, காயம் காரணமாக வெளியேறினார். இதையடுத்து, வங்காளதேசம் விக்கெட்டுகளை இழக்கத்தொடங்கியது. 

2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில், வங்காளதேச அணி  32.3 ஓவர்கள் முடிவில்  6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்துள்ளது.  முஷ்புகிர் ரகிம் 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.  இந்திய அணியைவிட வங்காளதேச அணி இன்னும் 89 ரன்கள் பின் தங்கியுள்ளது. 


Next Story