‘டோனியை போன்று சாதிக்க விரும்புகிறேன்’- கேரி


‘டோனியை போன்று சாதிக்க விரும்புகிறேன்’- கேரி
x
தினத்தந்தி 12 Jan 2020 12:11 AM GMT (Updated: 12 Jan 2020 12:11 AM GMT)

டோனியை போன்று சாதிக்க விரும்புவதாக அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி ஆஸ்திரேலிய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் 28 வயதான அலெக்ஸ் கேரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘எனது ஆட்டத்தில் இன்னும் நிறைய பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. அனேகமாக நான் மிடில் வரிசை அல்லது பின்வரிசையில் இறங்கி பேட்டிங் செய்வேன் என்பது தெரியும். எனவே ஆஸ்திரேலிய அணிக்காக ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முயற்சிப்பேன். இந்திய வீரர் டோனி நெருக்கடியான போட்டிகளில் ஆட்டத்தை கச்சிதமாக முடிப்பதில் கில்லாடியாக திகழ்ந்தார். அவரை போன்று நானும் சாதிக்க விரும்புகிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும். அதிர்ஷ்டவசமாக கடந்த ஆண்டு டோனிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை பெற்றேன். அவர் ஆட்டத்தை தனக்குள் எடுத்துக் கொண்டு இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்ததை பார்த்தேன். அது எனக்கு உத்வேகம் அளிக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான இந்த தொடர் கடினமாக இருக்கும். அதுவும் அதிகமான சுழற்பந்து வீச்சு தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய மிடில் ஓவர்கள் தான் சவாலான பகுதியாகும்’ என்றார்.


Next Story