டோனியின் கேப்டன்ஷிப் அணுகுமுறை அருமையானது’ முரளிதரன் புகழாரம்


டோனியின் கேப்டன்ஷிப் அணுகுமுறை அருமையானது’ முரளிதரன் புகழாரம்
x
தினத்தந்தி 10 Aug 2020 7:55 PM GMT (Updated: 10 Aug 2020 7:55 PM GMT)

டோனியின் கேப்டன்ஷிப் அணுகுமுறை மற்றும் கோட்பாடுகள் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று முரளிதரன் கூறியுள்ள்ளார்.

புதுடெல்லி, 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன் டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில் கூறியதாவது:-

2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இளம் வயது கேப்டனான டோனி இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்தார். டோனியின் கேப்டன்ஷிப் அணுகுமுறை மற்றும் கோட்பாடுகள் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஏனெனில் அவர் பவுலரிடம் பந்தை கொடுத்து பவுலரையே தனது பந்து வீச்சுக்கு தகுந்த மாதிரி பீல்டிங்கை அமைத்து விட்டு பந்து வீசும்படி கூறுவார். அது சரியாக அமையாவிட்டால், பவுலரிடம் அனுமதி பெற்று தானே பீல்டிங்கை உருவாக்குவார். 

பவுலர் நன்றாக வீசிய பந்தை பேட்ஸ்மேன் சிக்சர் அடித்தால் பவுலரை கைதட்டி பாராட்டுவார். சிக்ஸ் அடித்ததற்காக கவலைப்பட வேண்டாம் நல்ல பந்தை தான் பேட்ஸ்மேன் தனது திறமையால் சிக்சராக அடித்து இருக்கிறார் என்று தேற்றுவார். இதுபோன்ற பாராட்டுதல்கள் எல்லோரிடம் இருந்தும் வராது. சக வீரர் தனது தவறை திருத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லோருக்கு தெரியும்படியாக வெளிப்படையாக சொல்லாமல், தனியாக அழைத்து தெரிவிப்பார். 

அது அவருடைய வெற்றிகரமான கேப்டன் செயல்பாட்டுக்கு ஒரு காரணமாகும். அமைதியாக சிந்திக்கும் திறன் கொண்ட அவர் சீனியர் வீரர்கள் கூறும் கருத்துகளை கேட்டு ஆலோசித்து முடிவு எடுப்பார். அணியை வெற்றிகரமாக நடத்தி செல்தவற்கு எந்த வீரர்கள் தனக்கு தேவை என்பதில் அவர் மிகவும் கவனமாக இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story