ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எழுச்சி பெறுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பற்றிய ஒரு சுவாரஸ்யமான அலசல்:-
ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் மூன்று முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தும் ஒரு முறை கூட பட்டம் வெல்லாத ஒரே அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் தான். ஒவ்வொரு சீசனிலும் நட்சத்திர வீரர்கள் இருந்தும் சீரற்ற ஆட்டமும், நெருக்கடியை சமாளிக்க முடியாமல் மிரள்வதும் தொடர்கதையாகிறது. இத்தனைக்கும் உலகின் தலைச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் விராட் கோலி அந்த அணியின் கேப்டனாக இருக்கிறார்.
புதிய லோகோ, சில புதிய வீரர்களின் பிரவேசம், பயிற்சி குழுவில் மாற்றம் என்று வழக்கம் போல் அணி செதுக்கப்பட்டு களம் காணுகிறது. கேரி கிர்ஸ்டன் விடுவிக்கப்பட்டு புதிய தலைமை பயிற்சியாளராக சைமன் கேடிச் பொறுப்பேற்றுள்ளார்.
அதிரடி வீரர் ஆரோன் பிஞ்சின் வருகை, விராட் கோலி- டிவில்லியர்ஸ் கூட்டணியின் பேட்டிங் சுமையை குறைக்க உதவும். உள்ளூர் போட்டிகளில் ரன் மழை பொழியும் கர்நாடக இளம் பேட்ஸ்மேன் 20 வயதான தேவ்தத் படிக்கல், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி ஆகியோரும் பேட்டிங் வரிசைக்கு வலு சேர்க்கிறார்கள். சுழற்பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், பவான் நெகி, ஆடம் ஜம்பா உள்ளிட்டோர் மெதுவான தன்மை கொண்ட அமீரக ஆடுகளங்களில் கலக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் மிடில் வரிசையில் போதிய இந்திய பேட்ஸ்மேன்கள் இல்லாததும், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வெளிநாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் இல்லாததும் குறைபாடாகும். 37 வயதான ஸ்டெயின், ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கிறிஸ் மோரிஸ் அசத்தினால், பெங்களூரு அணிக்கு போனசாக அமையும்.
கடந்த ஆண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட பெங்களூரு அணி இந்த முறை எழுச்சி பெற்று முதல்முறையாக கோப்பையை கையில் ஏந்தும் முனைப்புடன் காத்திருக்கிறது. தந்தையாகும் சந்தோஷத்தில் உள்ள கேப்டன் விராட் கோலியின் லட்சியமும் அது தான்.
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் (263 ரன்) குவித்த அணி, குறைந்த ரன்னில் சுருண்ட அணி (49 ரன்) ஆகிய இரு சாதனைகளை தன்வசம் வைத்து உள்ள பெங்களூரு அணி தனது முதலாவது ஆட்டத்தில் 21-ந்தேதி ஐதராபாத் சன் ரைசர்சை சந்திக்கிறது.
அடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா தக்கவைக்கப்பட்டு உள்ளார். ராஜஸ்தான் அணியில் சுமித்தும், பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல்லும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ என்று சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார்.