இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வி


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 14 Sep 2020 11:05 PM GMT (Updated: 14 Sep 2020 11:05 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. பின்னர் 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் (6 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (9 ரன்) ஆகியோர் விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தாலும், 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஆரோன் பிஞ்ச்-மார்னஸ் லபுஸ்சேன் ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை தூக்கி நிறுத்தினார்கள். 30 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் என்ற நல்ல நிலையை எட்டியது.

3-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் திரட்ட உறுதுணையாக இருந்த லபுஸ்சேன் (48 ரன்) கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அதன் பிறகு அந்த அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 23 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகள் காலியானது. நிலைத்து நின்று ஆடிய ஆரோன் பிஞ்ச் 73 ரன்னில் (105 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். சற்று நேரம் போராடிய அலெக்ஸ் கேரி (36 ரன்) கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவர்களில் 207 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆகி அதிர்ச்சி கண்டது. இதனால் இங்கிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ், சாம் கர்ரன் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள். ஆர்ச்சர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையை எட்டியது. முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Next Story