ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணியிடம் பணிந்தது பஞ்சாப்


ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணியிடம் பணிந்தது பஞ்சாப்
x
தினத்தந்தி 1 Oct 2020 11:24 PM GMT (Updated: 1 Oct 2020 11:24 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை வீழ்த்தி மும்பை அணி 2-வது வெற்றியை சுவைத்தது.

அபுதாபி,

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் நேற்றிரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை சந்தித்தது. பஞ்சாப் அணியில் ஒரே ஒரு மாற்றமாக சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வினுக்கு பதிலாக கிருஷ்ணப்பா கவுதம் சேர்க்கப்பட்டார்.‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல், முதலில் மும்பையை பேட் செய்ய அழைத்தார். இதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். காட்ரெல் வீசிய முதல் ஓவரிலேயே குயின்டான் டி காக் (0) கிளீன் போல்டானதுடன், முதல் ஓவர் மெய்டனும் ஆனது. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (10 ரன்) ரன்-அவுட்டில் வீழ்ந்தார்.

இதற்கிடையே, ரோகித் சர்மா 8 ரன்னில் இருந்த போது முகமது ஷமியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனதாக நடுவர் விரலை உயர்த்தினார். பிறகு டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்து ரோகித் தப்பித்தார்.

ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் 3-வது விக்கெட்டுக்கு கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 83 ரன்களை எட்டிய போது இஷான் கிஷன் (28 ரன், 32 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) முட்டிப்போட்டு பந்தை தூக்கிய போது கேட்ச் ஆகிப்போனார்.

இதன் பின்னர் ரோகித் சர்மாவும், பொல்லார்ட்டும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்துவதில் கவனம் செலுத்தினர். ஜேம்ஸ் நீஷத்தின் ஒரே ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரி, 2 சிக்சர்களை ரோகித் சர்மா தெறிக்க விட்டார். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 70 ரன்களில் (45 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தார். முகமது ஷமியின் பந்து வீச்சில் அவர் விளாசிய பந்தை எல்லைக்கோடு அருகே மேக்ஸ்வெல் பிடித்தார். தடுமாறிய அவர் எல்லைக்கோட்டை கடப்பதற்குள் பந்தை உள்பக்கமாக வீசினார். அதை நீஷம் கேட்ச் செய்தார்.

இதைத் தொடர்ந்து கடைசி கட்டத்தில் அமர்க்களப்படுத்திய பொல்லார்ட்- ஹர்திக் பாண்ட்யா கூட்டணி மும்பை அணியின் ஸ்கோரை தடாலடியாக எகிற வைத்தனர். சுழற்பந்து வீச்சாளர் கிருஷ்ணப்பா கவுதம் வீசிய இறுதி ஓவரில் மட்டும் 4 சிக்சர்கள் பறந்தன. இதில் பொல்லார்ட்டின் ஹாட்ரிக் சிக்சரும் அடங்கும்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. பொல்லார்ட் 47 ரன்களுடனும் (20 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 30 ரன்களுடனும் (11 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் மட்டும் 89 ரன்கள் திரட்டி வியப்பூட்டினர்.

அடுத்து 192 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. முந்தைய ஆட்டங்களில் கலக்கிய தொடக்க வீரர் மயங்க் அகர்வால் (25 ரன்) பும்ராவின் பந்து வீச்சில் போல்டு ஆனார். மற்றொரு தொடக்க வீரரும், கேப்டனுமான லோகேஷ் ராகுலும் (17 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. இதனால் நெருக்கடிக்குள்ளான பஞ்சாப் அணியால் வீழ்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. மிடில் வரிசையில் நிகோலஸ் பூரனின் (44 ரன், 27 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) பேட்டிங் மட்டும் குறிப்பிடும்படி இருந்தது. மேக்ஸ்வெல்லும் (11 ரன்) சோபிக்கவில்லை.

20 ஓவர்களில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுக்கு 143 ரன்களே எடுத்து பணிந்தது. இதன் மூலம் மும்பை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது. மும்பை தரப்பில் பும்ரா, பேட்டின்சன், ராகுல் சாஹர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பஞ்சாப் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

Next Story