டெல்லியை பழிதீர்க்கும் முனைப்பில் ராஜஸ்தான்


டெல்லியை பழிதீர்க்கும் முனைப்பில் ராஜஸ்தான்
x
தினத்தந்தி 13 Oct 2020 11:30 PM GMT (Updated: 13 Oct 2020 11:25 PM GMT)

டெல்லியை பழிதீர்க்கும் முனைப்பில் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.


இந்த சீசனில் பிரமாதமாக விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டு 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. அதிரடி பேட்ஸ்மேன்கள், திறமையான பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள டெல்லி அணிக்கு விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் தசைப்பிடிப்பால் அவதிப்படுவது திடீர் பின்னடைவாக அமைந்துள்ளது. அவரை ஒரு வாரம் ஓய்வு எடுக்க அணி மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அணியில் மாற்று விக்கெட் கீப்பர் வெளிநாட்டவராக (ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி) இருப்பதால் வேறு வழியின்றி அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேன் ஹெட்மயரை நீக்க வேண்டியுள்ளது. மும்பைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் இத்தகைய மாற்றத்துடன் இறங்கிய டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. ஆனாலும் நட்சத்திர வீரர்களின் பட்டாளத்துக்கு குறைவில்லாததால் டெல்லி அணி வலுவாகவே தென்படுகிறது.

7 ஆட்டங்களில் 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் அடைந்துள்ள ராஜஸ்தான் அணிக்கு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சின் வருகை புதுதெம்பை கொடுத்துள்ளது. அத்துடன் ஐதராபாத்துக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 159 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய போது முன்னணி வீரர்கள் கைவிட்டு தோல்வியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தானை பிரபலம் இல்லாத வீரர்களான ராகுல் திவேதியாவும் (45 ரன்), ரியான் பராக்கும் (42 ரன்) ஜோடியாக காப்பாற்றினர். இது ராஜஸ்தானின் நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. சஞ்சு சாம்சன், கேப்டன் ஸ்டீவன் சுமித் பார்முக்கு திரும்பினால் ராஜஸ்தான் மேலும் வலுப்பெறும். ஏற்கனவே சார்ஜாவில் நடந்த டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருந்த ராஜஸ்தான் அணி அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் வியூகங்களை வகுத்துள்ளது. இங்குள்ள சூழலில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும்.


Next Story