சாம் கரண் சிறப்பாக பேட் செய்தார்- பொல்லார்ட் பாராட்டு


சாம் கரண் சிறப்பாக பேட் செய்தார்-  பொல்லார்ட் பாராட்டு
x
தினத்தந்தி 24 Oct 2020 6:12 AM GMT (Updated: 24 Oct 2020 6:36 AM GMT)

சென்னை அணியை 100 ரன்களுக்குள் சுருட்டியிருக்க வேண்டும். ஆனால் சாம் கரண் சிறப்பாக விளையாடினார் என பொல்லார்ட் கூறினார்.

சார்ஜா,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க நேற்றைய போட்டியில் கட்டாயம் சென்னை வென்றாக வேண்டிய கட்டத்தில் இருந்தது. ஆனால், இந்தப் போட்டியில் சென்னை அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி  ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

 குறிப்பாக சென்னை அணி 3 ரன்கள் எடுப்பதற்கு முன்பாகவே 4 விக்கெட்டுகளை இழந்தது. 21 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்ததால், சென்னை அணி 100 ரன்கள் நிச்சயம் எட்டாது என்றே ரசிகர்கள் கணித்தனர். ஆனால், சென்னை வீரர் சாம் கரணின்  சிறப்பான அரை சதத்தின் உதவியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 114- ரன்களை சேர்த்தது. இதையடுத்து எளிய இலக்குடன் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

இந்தப்போட்டிக்கு பிறகு பேட்டி அளித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் பொறுப்பு கேப்டன் பொல்லார்ட் கூறியதாவது:- சென்னை  அணியை 100 ரன்களுக்குள் சுருட்டியிருக்க வேண்டும். ஆனால் சாம் கரண் அபாரமாக விளையாடினார். ஆட்டத்தின் ஆரம்பத்தில் இரண்டு மூன்று விக்கெட்டுகள் கிடைத்தாலே ஆதிக்கம் செலுத்த முடியும். ஆனால் எங்களுக்கு நான்கைந்து விக்கெட்டுகள் கிடைத்தது சிறப்பாக  இருந்தது. 
.
இரு புள்ளிகளை இந்த ஆட்டத்தில் பெற்று அதன்பிறகு புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பற்றி பேச நினைத்தோம்.  கடந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் தோற்றது வருத்தத்தை ஏற்படுத்தியது” என்றார். 

Next Story