சுழல் ஆடுகளத்தை மட்டும் விமர்சிப்பது ஏன்? விராட் கோலி கேள்வி


சுழல் ஆடுகளத்தை மட்டும் விமர்சிப்பது ஏன்? விராட் கோலி கேள்வி
x
தினத்தந்தி 3 March 2021 11:49 PM GMT (Updated: 3 March 2021 11:49 PM GMT)

ஆமதாபாத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டி 2-வது நாளிலேயே முடிந்ததால் வெகுவாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக சுழலின் கூடாரமாக இந்த ஆடுகளம் (பிட்ச்) இருந்தது குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர்களும், சில ஊடகத்தினரும் குறை கூறினார்கள்.

அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் இருந்து விட்டாலே குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கி விடுகின்றன. அது பற்றி விமர்சிப்பதும், விவாதிப்பதும் தொடர்கதையாகி விட்டது. ஒரு டெஸ்ட் போட்டி 4-வது அல்லது 5-வது நாளில் முடிந்தால் அது பற்றி யாரும் பேசுவதில்லை. அதுவே இரண்டு நாட்களுக்குள் நிறைவடைந்தால் அதை விவகாரமாக்கி விடுகிறார்கள். நியூசிலாந்து மண்ணில் நடந்த டெஸ்டில் நாங்கள் 3-வது நாளில் 36 ஓவர்களில் தோல்வி அடைந்தோம். அப்போது இங்குள்ளவர்கள் யாரும் பிட்ச் குறித்து கருத்து சொல்லவில்லை. விமர்சிக்கவும் இல்லை. ஆடுகளம் எப்படி இருந்தது?, 

வேகப்பந்தின் நகர்வு தன்மை எப்படி இருந்தது? எவ்வளவு புற்கள் இருந்தது? என்று யாரும் பார்க்கவும் இ்ல்லை. ஆடுகளம் சரியில்லை என்று கண்டிக்கவும் இல்லை.எங்களை பொறுத்தவரை நாங்கள் ஆடுகளம் பற்றி புகார் செய்வதில்லை. எத்தகைய ஆடுகளமாக இருந்தாலும் அதற்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொண்டு ஒரு அணியாக முன்னெடுத்து செல்லும் நோக்குடன் விளையாடுகிறோம். அதையே தொடர்ந்து செய்வோம். இது தான் எங்களது வெற்றியின் ரகசியம். எப்போதுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை விட சுழல் ஆடுகளங்கள் மீது தான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. வேகப்பந்து வீச்சுக்கு உதவும் ஆடுகளங்களில் 40, 50, 60 ரன்களில் ஆல்-அவுட் ஆனால் அது பற்றி வாய் திறப்பதில்லை. எனவே நாம் அனைவரும் நமக்கு நாமே நேர்மையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். ஆடுகளம் விஷயத்தில் ஏன் ஒரு தரப்பாகவே பேசுகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை.

நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நாம் விளையாடுவது வெற்றி பெறுவதற்கா? அல்லது ஆட்டத்தை 5 நாட்கள் வரை கொண்டு செல்வதற்கா? இது என்ன பொழுது போக்கா? வெற்றி பெறுவதற்காகவே விளையாடுகிறோம். வெற்றி பெறும் போது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதனால் எத்தனை நாட்களில் போட்டி முடிகிறது என்பது கேள்வி அல்ல.

இவ்வாறு கோலி கூறினார்.

Next Story