இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடர் உலக கோப்பை போட்டிக்கான ஒத்திகை இல்லை இந்திய வீரர் ரோகித் சர்மா சொல்கிறார்


இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடர் உலக கோப்பை போட்டிக்கான ஒத்திகை இல்லை இந்திய வீரர் ரோகித் சர்மா சொல்கிறார்
x
தினத்தந்தி 11 March 2021 4:44 AM GMT (Updated: 11 March 2021 4:44 AM GMT)

இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடர் உலக கோப்பை போட்டிக்கான ஒத்திகை இல்லை இந்திய வீரர் ரோகித் சர்மா சொல்கிறார்.

ஆமதாபாத், 

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் ஆமதாபாத்தில் நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இந்த 20 ஓவர் தொடரை, இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடக்க உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஒத்திகையாக நாங்கள் பார்க்கவில்லை. இங்கிலாந்து தொடரை வெல்வதில் தான் எங்களது கவனம் உள்ளதே தவிர, நீண்ட காலத்திற்கு பிறகு நடக்க உள்ள உலக போட்டி குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. தற்போதைய போட்டிகளில் தீவிர கவனம் செலுத்தி நன்றாக ஆடினால், எதிர்கால போட்டிகள் தானாகவே நல்லபடியாக அமையும். இது பெரிய தொடர். இதில் ஒரு அணியாகவும், தனிப்பட்ட முறையிலும் நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை பார்க்க வேண்டியது முக்கியம். என்னுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல் அல்லது ஷிகர் தவான் ஆகியோரில் யார் இறங்குவார் என்று கேட்கிறீர்கள். ஆடும் லெவன் அணி குறித்து நான் எதுவும் சொல்ல இயலாது. யார்-யார் இடம் பெறுவார்கள் என்பதை அறிய வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள்.

காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சில வாரங்களாக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அணி நிர்வாகம் அவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறதோ அதை செய்ய அவர் தயாராக இருப்பார் என்று நம்புகிறேன்’ என்றார்.

Next Story