இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் விலகல்


இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் விலகல்
x
தினத்தந்தி 24 March 2021 11:30 PM GMT (Updated: 24 March 2021 9:44 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் விலகி உள்ளார்.

புனே, 

இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய ஒரு நாள் போட்டி தொடரில் இருந்து காயம் காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் விலகி இருக்கிறார். அவர் ஐ.பி.எல். போட்டியின் முதல் கட்ட ஆட்டங்களிலும் ஆட முடியாது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் புனேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இதற்கிடையே, முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்கையில் 8-வது ஓவரில் பேர்ஸ்டோ அடித்த பந்தை இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் தடுக்க பாய்ந்தார். அப்போது தரையில் விழுந்த அவருக்கு இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் உடனடியாக களத்தில் இருந்து வெளியேறினார்.

காயத்தின் தன்மையை அறிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு இடது தோள்பட்டை கொஞ்சம் இறங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த காயம் குணமடைய பல வாரங்கள் ஆகும். இதனால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் எஞ்சிய ஆட்டங்களில் விளையாட முடியாது. அத்துடன் அவர் ஏப்ரல் 9-ந் தேதி தொடங்கும் 14-வது ஐ.பி.எல். போட்டியில் முதல் பாதி ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

ஐ.பி.எல். போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் அய்யர் அந்த அணியின் முக்கியமான பேட்ஸ்மேனும் ஆவார். அவரது தலைமையில் அந்த அணி கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கடந்த சீசனில் 519 ரன்கள் குவித்த ஸ்ரேயாஸ் ஆடமுடியாதது டெல்லி அணிக்கு பெரிய இழப்பாக அமைந்து இருப்பதுடன், புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய நிலைக்கும் அந்த அணி தள்ளப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் குணமடைந்து களம் திரும்பும் வரை டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை ரிஷாப் பண்ட், ஸ்டீவன் சுமித், அஸ்வின் ஆகியோரில் ஒருவர் கவனிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணிக்கும் காயத்தால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பீல்டிங் செய்கையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு வலது கை பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் சதை கிழிவு ஏற்பட்டதால் தையல் போடப்பட்டுள்ளது. இதேபோல் தரையில் விழுந்து பந்தை தடுக்க முயன்ற போது மற்றொரு வீரரான சாம் பில்லிங்சுக்கு தோள்பட்டை எலும்பில் காயம் ஏற்பட்டது. இருவரும் 2-வது ஒருநாள் போட்டியில் ஆடுவது சந்தேகம் தான்.

Next Story