‘பேட்டிங்கில் நாங்கள் மீண்டும் சொதப்பி விட்டோம்’; மும்பை கேப்டன் ரோகித் சர்மா புலம்பல்


‘பேட்டிங்கில் நாங்கள் மீண்டும் சொதப்பி விட்டோம்’; மும்பை கேப்டன் ரோகித் சர்மா புலம்பல்
x
தினத்தந்தி 24 April 2021 9:45 PM GMT (Updated: 24 April 2021 9:45 PM GMT)

பேட்டிங்கில் நாங்கள் மீண்டும் சொதப்பி விட்டோம் என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

பஞ்சாப் வெற்றி

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. முதலில் ஆடிய மும்பை அணி தட்டுத்தடுமாறி 6 விக்கெட்டுக்கு 131 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 63 ரன்கள் சேர்த்தார். பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 17.4 ஓவர்களில் இலக்ைக எட்டிப்பிடித்தது. கேப்டன் லோகேஷ் ராகுல் 60 ரன்னுடனும், அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 43 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

லோகேஷ் ராகுல் கருத்து

வெற்றிக்கு பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில், ‘நாங்கள் மெதுவாக ஒருங்கிணைந்து ஒரு அணியாக செயல்பட தொடங்கி இருக்கிறோம். எங்கள் அணி இளம் வீரர்களை கொண்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் புதிய வீரர்களை சேர்த்து வருகிறோம். எனவே நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். தீபக் ஹூடா சிறப்பாக விளையாடி வருகிறார். ஷாருக்கான் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துகிறார். இந்த ஆட்டத்தில் ரவி பிஷ்னோய் அருமையாக செயல்பட்டார். ஆடுகளத்தில் பந்து நின்று மெதுவாக வந்தது. நாங்கள் இங்கு ஆடிய ஆட்டங்களில் பவுலர்கள் எப்போதும் நெருக்கடியில் இருப்பதை உணர்ந்து இருக்கிறோம். இதுபோன்ற சூழ்நிலையிலும் பந்து வீச்சாளர்கள் பந்து வீச கற்றுக்கொள்ள வேண்டியது முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று கேள்விப்பட்டு இருந்ததால் பந்து ஈரமாகி பேட்டுக்கு நன்றாக வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. பந்து நன்கு உலர்ந்து இருந்ததால் ரன் எடுப்பது கடினமாக இருந்தது. கிறிஸ் கெய்ல் யாருடைய பந்து வீச்சை அடித்து ஆட வேண்டும் என்பதை சரியாக அடையாளம் கண்டு செயல்பட்டார். அவரை போல் ஒருவர் இருப்பது பலமாகும்’ என்றார்.

ரோகித் சர்மா சொல்வது என்ன?

தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் போதுமான ரன்கள் எடுக்கவில்லை. ஆடுகளம் அப்படி ஒன்றும் பேட்டிங் செய்வதற்கு மோசமானதாக இருக்கவில்லை. ஆடுகளம் சரியாக இல்லாவிட்டால் பஞ்சாப் அணி எப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்க முடியும். 150-160 ரன்கள் எடுத்தால் தான் ஆட்டத்தில் எப்ேபாதும் சவால் அளிக்க முடியும். கடந்த 2 ஆட்டங்களில் நாங்கள் பேட்டிங்கில் சொதப்பி விட்டோம். இந்த விஷயத்தில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். ‘பவர்-பிளே’யில் பஞ்சாப் அணி பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். இஷான் கிஷன் அடித்து ஆட முயற்சித்தார். ஆனால் பந்து சரியாக சிக்கவில்லை. எனக்கும் அதே நிலை தான் இருந்தது. முந்தைய நான்கு ஆட்டங்களில் ‘பவர்-பிளே’யில் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்தோம். ஆனால் இந்த ஆட்டத்தில் அதனை செய்ய தவறிவிட்டோம். ஆட்டம் முழுவதும் நாங்கள் விரும்பிய வகையில் எங்களது பேட்டிங் அமையவில்லை. சுழற்பந்து வீச்சை நன்றாக எதிர்கொண்டு ஆடும் சூர்யகுமார் யாதவ் மிடில் வரிசையில் ஆட சரியானவர் என்று நாங்கள் அடையாளம் கண்டு இருக்கிறோம். அது சரியாக அமைந்தால் நன்றாக இருக்கும். அது நடக்காவிட்டால் மோசமானதாகும். நாங்கள் தனியாக முடிவு எடுப்பதில்லை. ஒன்றிணைந்து தான் முடிவுகளை எடுக்கிறோம். சூழ்நிலை கடினமாக இருந்தால் எப்படி பேட்டிங் மற்றும் பந்து வீச வேண்டும் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.


Next Story