இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்தியா 278 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட்


இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்தியா 278 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட்
x
தினத்தந்தி 6 Aug 2021 7:03 PM GMT (Updated: 6 Aug 2021 7:03 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 278 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

நாட்டிங்காம், 

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 183 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா மழை பாதிப்பால் முன்கூட்டியே முடிக்கப்பட்ட 2-வது நாளில் 4 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் 57 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 7 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்ததால் ஒரு மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இந்திய அணியினர் பேட்டிங் செய்தனர். ரிஷாப் பண்ட் 25 ரன்னில் (20 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து லோகேஷ் ராகுலும், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் கைகோர்த்தனர். மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில் பந்து நன்கு ‘ஸ்விங்’ ஆனாலும் அவர்களின் சவாலை சமாளித்து ரன்கள் திரட்டினர். அணியின் ஸ்கோர் 205 ரன்களாக உயர்ந்த போது, லோகேஷ் ராகுல் 84 ரன்களில் (214 பந்து, 12 பவுண்டரி) ஆண்டர்சனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் சிக்கினார். மறுமுனையில்16-வது அரைசதத்தை பூர்த்தி செய்த ஜடேஜா தனது பங்குக்கு 56 ரன்கள் (86 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.

கடைசி கட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா ஆச்சரியப்படும் வகையில் தடாலடி காட்டினார். சாம் கர்ரனின் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் தொடர்ச்சியாக விரட்டிய பும்ரா 28 ரன்களில் (34 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார்.

முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 84.5 ஓவர்களில் 278 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி மொத்தம் 95 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆலி ராபின்சன் 5 விக்கெட்டுகளும், ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 11.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்திருந்த போது மறுபடியும் மழை கொட்டியதால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.


Next Story