ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா


ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா
x
தினத்தந்தி 7 Oct 2021 4:32 PM GMT (Updated: 7 Oct 2021 4:32 PM GMT)

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 171 ரன்கள் குவித்தது.

சார்ஜா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 54-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது. இதில் 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ள கொல்கத்தா அணி இன்றைய ஆட்டத்தில் ஓரளவு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றை எட்டி விடலாம் என்ற நிலையில் இருக்கிறது.

அதே சமயம் 10 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் இமாலய வெற்றியை ருசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

இதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். இவர்களது ஜோடியில் கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. வெங்கடேஷ் ஐயர் 3 பவுண்டரிகள், 2 சிக்சருடன் 38 ரன்கள் சேர்த்த நிலையில், ராகுல் திவாட்டியா வீசிய பந்தில் பவுல்ட் ஆனார்.

அடுத்து வந்த நிதிஷ் ராணா 12 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். 3 பவுண்டரிகளை விளாசிய ராகுல் திரிபாதி, 21 ரன்களில் பவுல்ட் ஆகி ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடி அரைசதத்தைக் கடந்த ஷுப்மன் கில்(4 பவுண்டரிகள், 2 சிக்சர்) 56 ரன்களில் கேட்ச் ஆனார்.

இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. இந்த ஆண்டு சார்ஜாவில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். தினேஷ் கார்த்திக்(14) மற்றும் இயன் மார்கன்(13) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் கிறிஸ் மோரிஸ், சேத்தன் சகாரியா, ராகுல் திவாட்டியா மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகிய நால்வரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதையடுத்து 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி தற்போது விளையாடி வருகிறது. 

Next Story