வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் விலகிய டி காக்


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் விலகிய டி காக்
x
தினத்தந்தி 26 Oct 2021 10:06 PM GMT (Updated: 26 Oct 2021 10:06 PM GMT)

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வீரர்கள் கட்டாயம் மைதானத்தில் முழங்காலிட வேண்டும் என்று நெருக்கடி கொடுத்ததால் அதிருப்திக்குள்ளான டி காக் ஒதுங்கியிருக்கிறார்.

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணியில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் இடம் பெறவில்லை. அவர் தனிப்பட்ட காரணத்துக்காக இந்த ஆட்டத்தில் இருந்து கடைசி நேரத்தில் விலகியதாக அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் ‘ஜகா’ வாங்கியதற்கான பின்னணி தெரிய வந்துள்ளது.

இந்த 20 ஓவர் உலக கோப்பையில் எஞ்சிய ஆட்டங்களில் ஒவ்வொரு ஆட்டம் தொடங்கும் முன்பாக, ‘கருப்பின மக்களின் வாழ்வின் முக்கியம்’ என்ற இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வீரர்கள் மைதானத்தில் (30 வினாடி) முழங்காலிட்டு நிற்க வேண்டும் என்று தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று உத்தரவிட்டது. இனவெறிக்கு எதிரான இந்த வித்தியாசமான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள குயின்டாக் டி காக் ஏற்கனவே தயக்கம் காட்டியிருந்தார். 

‘இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு. இப்படி தான் செய்ய வேண்டும் என்று யாரையும் நிர்ப்பந்திக்க முடியாது. இந்த வகையில் தான் இதை நான் அணுகுகிறேன்’ என்று டி காக் கூறியிருந்தார். ஆனால் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கட்டாயம் முழங்காலிட வேண்டும் என்று நெருக்கடி கொடுத்ததால் அதிருப்திக்குள்ளான டி காக் ஒதுங்கியிருக்கிறார். இது சர்ச்சையாக கிளம்பியதையடுத்து அணி நிர்வாகத்தின் அறிக்கையை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதே சமயம்,‘ டி காக்கின் முடிவை நாங்கள் மதிக்கிறோம்’ என்று தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா கூறியுள்ளார்.


Next Story