பேட்டிங்கில் கவனம் செலுத்த பிற கேப்டன் பதவியையும் கைவிடலாம்: கோலிக்கு ரவி சாஸ்திரி யோசனை
விராட் கோலி தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த, பிற கேப்டன் பதவியையும் கைவிடலாம் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
மும்பை,
விராட் கோலி, இருபது ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இருபது ஓவர் போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஏற்கெனவே அறிவித்தார்.
அதிக பணிச்சுமையின் காரணமாகவும், வரும் தலைமுறைக்கு வழிவிடவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் விராட் கோலி பேட்டிங்கில் கவனம் செலுத்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியை விட்டுக் கொடுப்பது குறித்து ரவிசாஸ்திரியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, விராட்கோலி தலைமையிலான இந்திய அணி அனைத்து பிரிவுகளிலும் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. அவர் கேப்டன் பதவியில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். அவர் அணியில் உள்ள அனைவரையும் விட சிறந்த உடற்தகுதி உடையவர். அதில் துளியும் சந்தேகமில்லை. டெஸ்ட் பட்டியலில் விராட் கோலியின் கேப்டன்சியின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியா முதலிடத்தில் உள்ளது.
விராட்கோலி கேப்டன் பொறுப்பின் போது அதிக பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை எதிர்கொண்டால், வரும் காலங்களில் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்கலாம். பேட்டிங்கில் முழு கவனத்தை செலுத்த அவர் வரும் காலங்களில் இந்த முடிவை எடுக்கலாம், என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story