ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது வலித்தது; டேவிட் வார்னர் வேதனை


ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது வலித்தது; டேவிட் வார்னர் வேதனை
x
தினத்தந்தி 17 Nov 2021 11:04 AM GMT (Updated: 17 Nov 2021 11:04 AM GMT)

தான் மிகவும் விரும்பிய அணியில் இருந்து எந்த தவறும் செய்யாமல் என்னை நீக்கியது வேதனை அளிப்பதாக வார்னர் தெரிவித்துள்ளார்

ஆஸ்திரேலியா 

2016 ஆம் ஆண்டு நடந்த  ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பட்டம் வென்றபோது அணி கேப்டனாக செயல்பட்டவர் டேவிட் வார்னர். இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடந்த ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே இவருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டனாக இருந்த டேவிட் வார்னரின் பதவியை பறித்த அணி நிர்வாகம், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனை  கேப்டனாக நியமித்தது. அது மட்டுமின்றி ஆடும் லெவனிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 20 ஓவர்  உலக கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா தனது முதல் 20  ஓவர் உலகக் கோப்பையை வென்றது. டேவிட் வார்னர் பேட்டிங்கில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்தார். முடிவடைந்த 20 ஓவர்  உலகக் கோப்பையில் வார்னர் 7 இன்னிங்ஸ்களில் 289 ரன்கள் எடுத்திருந்தார்.20  ஓவர் உலகக் கோப்பையில் போட்டியின் தொடர் நாயகன் விருதை வென்றவர்  டேவிட் வார்னர்.

இது குறித்து தனியார் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ள  டேவிட் வார்னர் கூறியதாவது;-

பல ஆண்டுகளாக நான் மிகவும் விரும்பிய அணியில் இருந்து எந்த தவறும் செய்யாமல் என்னை நீக்கியதும், காரணம் கூறாமல் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதும் வேதனை அளிக்கிறது. அதே சமயம் இதை நான் புகாராக கூறவில்லை. இந்தியாவில் உள்ள ரசிகர்களை மகிழ்விக்க நாங்கள் கிரிக்கெட் விளையாடுகிறோம்.

ஐபிஎல் அணியில் இடம் கிடைக்காமல் போனதற்குக் காரணம் எதுவாக இருந்தாலும், நான் எப்போதும் மிகக் கடினமான பயிற்சியை மேற்கொள்ள தவறவில்லை. நான் வலைப் பயிற்சியில் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தேன். ஒரு பக்கம் வாய்ப்பு மறுக்கப்பட்டால் , இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என்று எனக்குத் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் இரண்டு புதிய அணிகள் வரவுள்ளன . இதனால் டேவிட் வார்னர் அடுத்த ஐபிஎல் சீசனில் புதிய அணிக்காக  விளையாடலாம். இருப்பினும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி  நிர்வாகம் அவர் வெளியேறுவதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

வார்னர் ஐபிஎல்  தொடரில் மிகச் சிறந்த  வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார், மேலும் 20 ஓவர் உலகக் கோப்பையில் அவர் சிறப்பாக ஆடியதை தொடர்ந்து ஐபிஎல் 2022 ஏலத்தில் அதிகம் விலைபோகும் வீரர்களில் ஒருவராக அவர் இருப்பார் என கருதப்படுகிறது.

Next Story