இந்திய அணி 5 பவுலர்களுடன் களம் இறங்க வாய்ப்பு : துணை கேப்டன் லோகேஷ் ராகுல்


இந்திய அணி 5 பவுலர்களுடன் களம் இறங்க வாய்ப்பு : துணை கேப்டன் லோகேஷ் ராகுல்
x
தினத்தந்தி 24 Dec 2021 9:40 PM GMT (Updated: 24 Dec 2021 9:40 PM GMT)

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நாளை தொடங்குகிறது

செஞ்சூரியன், 

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் லோகேஷ் ராகுல் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடைசியாக இங்கு (2017-18-ம் ஆண்டு) விளையாடிய தொடரை விட இந்த முறை இன்னும் சிறப்பாக தயாராகி இருக்கிறோம். நானும், மயங்க் அகர்வாலும் அணிக்கு வலுவான தொடக்கம் தருவோம் என்று நம்புகிறேன். முதல் 30-35 ஓவர்களில் விக்கெட்டை இழக்கக்கூடாது என்பதில் கவனம் செலுத்துகிறேன்.

பெரும்பாலான அணிகள் 5 பவுலர்களுடன் தான் போட்டியை தொடங்குகின்றன. ஏனெனில் ஒவ்வொரு அணியும் 20 விக்கெட்டுகளை வீழ்த்த விரும்புகின்றன. டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற ஒரே வழி அது தான். நாங்களும் வெளிநாட்டு டெஸ்டுகளில் இந்த யுக்தியை கடைபிடித்து இருக்கிறோம். அத்துடன் 5 பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் போது அவர்களின் பணிச்சுமை சற்று குறைகிறது. எனவே இந்த டெஸ்டில் நாங்கள் 5 பவுலர்களுடன் விளையாட வாய்ப்புள்ளது.

அஜிங்யா ரஹானே, ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரில் யாரை ஆடும் லெவனில் தேர்வு செய்வது என்பதை முடிவு செய்வது மிகவும் கடினம். ரஹானே டெஸ்ட் அணியின் மிகவும் முக்கியமான வீரர். முக்கியமான கட்டங்களில் சிறப்பாக விளையாடி உள்ளார். ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுக டெஸ்டிலேயே வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சதம் அடித்துள்ளார். இதே போல் விஹாரியும் அணிக்காக நன்றாக ஆடியுள்ளார். அதனால் இதில் முடிவு எடுப்பது கடினம்.

இங்குள்ள ஆடுகளங்களில் வேகமும், பவுன்சும் இருக்கும். ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது வித்தியாசமானது. சீக்கிரமாகவே தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று விட்ட நாங்கள் இங்குள்ள சூழலுக்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறோம்.

இவ்வாறு ராகுல் கூறினார்.

Next Story