இந்தியாவுக்கு எதிரான போட்டி : டெஸ்ட் அரங்கில் 28-வது சதத்தை பதிவு செய்தார் ஜோ ரூட்..!!
இந்த டெஸ்ட் தொடரில் ஜோ ரூட் அடிக்கும் 4-வது சதம் இதுவாகும்.
பர்மிங்கம்,
கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் சேர்த்தது. 132 ரன்கள் முன்னிலை பெற்றநிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இங்கிலாந்து வெற்றிபெற இந்திய அணி 378 ரன்கள் நிர்ணயித்தது. இந்த போட்டியின் முதல் 3 நாட்களிலும் ஆதிக்கம் செலுத்திவந்த இந்திய அணி நேற்று திணறியது. குறிப்பாக ஜோ ரூட் - பேர்ஸ்டோவ் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். கடைசி நாளான இன்று வெற்றிக்கு இன்னும் 100 ரன்களுக்கு கீழாகவே தேவைப்படும் நிலையில் இங்கிலாந்து அணியின் கைவசம் 7 விக்கெட்கள் உள்ளது.
நேற்று முதல் களத்தில் உள்ள ரூட் - பேர்ஸ்டோவ் ஜோடி தொடர்ந்து இன்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அபாரமாக விளையாடிய ஜோ ரூட் டெஸ்ட் அரங்கில் தனது 28-வது சதத்தை பதிவு செய்தார். குறிப்பாக 2021 ஆம் ஆண்டிக்கு பிறகு அவர் அடிக்கும் 11-வது டெஸ்ட் சதம் இதுவாகும். அதுமட்டுமின்றி இந்த டெஸ்ட் தொடரில் ஜோ ரூட் அடிக்கும் 4-வது சதம் இதுவாகும். டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஜோ ரூட் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 47 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.