ஆசிய கோப்பை: இலங்கை அசத்தல் பந்துவீச்சு- பாகிஸ்தான் அணி 121 ரன்களுக்கு ஆட்டமிழப்பு


ஆசிய கோப்பை: இலங்கை அசத்தல் பந்துவீச்சு- பாகிஸ்தான் அணி 121 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
x

Image Tweeted By @ICC 

பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

துபாய்,

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுப்போட்டிக்கு முன்னேறி விட்டன.

இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இறுதி போட்டிக்கு முன்னேறிய இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஷனாகா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் களமிறங்கினர். 14 ரன்கள் எடுத்திருந்த போது பிரமோத் மதுஷன் பந்துவீச்சில் குசல் மெண்டிஸிடம் கேட்ச் கொடுத்து ரிஸ்வான் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த பஹார் ஜமான் 13 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் பாகிஸ்தான் அணி சரிவை நோக்கி சென்றது. அணியின் கேப்டன் பாபர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

குஷ்தில் ஷா (4 ரன்கள்) இப்திகார் அகமது (13 ரன்கள்) அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பின்வரிசையில் அதிகபட்சமாக முகமது நவாஸ் 26 ரன்கள் எடுத்தார். இறுதியில் இலங்கை அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 3 விக்கெட்களையும், தீக்சனா மற்றும் மதுஷன் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.


Next Story