சுரேஷ் ரெய்னா போன்ற வீரரை சென்னை அணி கண்டுபிடிக்க வேண்டும் - ரவி சாஸ்திரி கருத்து


சுரேஷ் ரெய்னா போன்ற வீரரை சென்னை அணி கண்டுபிடிக்க வேண்டும் - ரவி சாஸ்திரி கருத்து
x

Image Courtesy : BCCI / IPL 

ரெய்னாவின் பங்களிப்பை நாம் மறந்து விடுவதாக சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசனின் பிளே ஆப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இதுவரை சென்னை அணி விளையாடியுள்ள 13 ஐபிஎல் சீசன்களில் 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சென்னை அணி தகுதி பெறாத 2 ஆண்டுகளிலும் சென்னை அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை.

2008 ஆம் ஆண்டு முதல் சென்னை அணியின் மகத்தான வெற்றிக்கு ரெய்னா பெரும் பங்களிப்பை வழங்கி வந்துள்ளார். அதன் பிறகு கடந்த ஆண்டு சென்னை அணிக்காக அவர் பெரிய அளவில் ரன் குவிக்காத காரணத்தால் அவரை சென்னை அணி ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்த நிலையில் சென்னை அணி ரெய்னா போன்ற வீரரை கண்டுபிடிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "சிஎஸ்கே பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது, ஆனால் சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பை நாம் மறந்து விடுகிறோம். சென்னை அணிக்காக 3-வது இடத்தில் பேட்டிங் செய்யும் போது தொடர்ந்து ரன்களை குவித்து அவர் அணிக்கு ஸ்திரத்தன்மையை அளித்து வந்தார்.

அவர் அணியின் மற்ற பேட்ஸ்மேன்-களுக்கு விஷயங்களை எளிதாக்கினார். அத்தகைய வீரரை சென்னை அணி கண்டுபிடிக்க வேண்டும்" என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.


Next Story