தென் ஆப்பிரிக்க தொடர் : ஷிகர் தவானை தேர்வு செய்யாதது டிராவிட் எடுத்த முடிவு - வெளியான தகவல்


தென் ஆப்பிரிக்க தொடர் : ஷிகர் தவானை தேர்வு செய்யாதது டிராவிட் எடுத்த முடிவு - வெளியான தகவல்
x

Image Courtesy : ANI 

தவான் தேர்வு செய்யப்படாதது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எடுத்த முடிவு என தெரியவந்துள்ளது.

மும்பை,

ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடக்கிறது. ஜூன் 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

அதில் இந்திய அணியின் கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரில் பல வருடங்களாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க தொடருக்கு தவான் தேர்வு செய்யப்படாதது இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எடுத்த முடிவு தான் என பிசிசிஐ-யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த உயர் அதிகாரி கூறுகையில், ""ஷிகர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்திய கிரிக்கெட்டிற்கு மகத்தான பணியாற்றி உள்ளார். ஆனால் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

ராகுல் டிராவிட் தான் தவானை தேர்வு செய்ய வேண்டாம் என்ற கடினமான முடிவை எடுத்தார். நாங்கள் அனைவரும் ஒப்புக்கொண்டோம். கடந்த ஞாயிற்றுக்கிழமை அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஷிகருக்கு ராகுல் டிராவிட் இந்த தகவலை தெரிவித்துவிட்டார்" என அவர் கூறினார்.


Next Story