தினேஷ் கார்த்திக் அரைசதம் : தென் ஆப்பிரிக்க அணிக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா


தினேஷ் கார்த்திக் அரைசதம் : தென் ஆப்பிரிக்க அணிக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
x

தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் தனது முதல் அரைசதத்தை சர்வதேச 20 ஓவர் போட்டியில் பதிவு செய்தார்.

ராஜ்கோட்,

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் - ருதுராஜ் களமிறங்கினர். ருதுராஜ் 5 ரன்களில் நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து இஷான் கிஷன், கேப்டன் பண்ட் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர்.

பின்னர் ஹர்திக் பாண்டியா - தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தனர். அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டனர். 15 ஓவர்கள் வரை நிதானம் காட்டிய இந்த ஜோடி பின்னர் அதிரடியை துவக்கினர். ஹர்திக் பாண்டியா 31 பந்துகளில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் தனது முதல் அரைசதத்தை சர்வதேச 20 ஓவர் போட்டியில் பதிவு செய்தார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நிகிடி 2 விக்கெட்களையும் யான்சென், மகாராஜ், நோர்ட்ஜெ தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்குகிறது.


Next Story