3-வது டெஸ்ட் தோல்வி: கவனக்குறைவாகவும், அதிக நம்பிக்கையுடனும் செயல்பட கூடாது - இந்திய அணியை விளாசிய ரவி சாஸ்திரி


3-வது டெஸ்ட் தோல்வி: கவனக்குறைவாகவும், அதிக நம்பிக்கையுடனும் செயல்பட கூடாது - இந்திய அணியை விளாசிய ரவி சாஸ்திரி
x

கோப்புப்படம்

கவனக்குறைவாகவும், அதிக நம்பிக்கையுடனும் செயல்படும் போது இதுபோன்ற தோல்விகள் ஏற்படும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

புதுடெல்லி,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடந்தது. சுழலுக்கு சொர்க்கபுரியாக திகழும் இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 109 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 76.3 ஓவர்களில் 197 ரன்னில் அடங்கியது. இதில் கடைசி 11 ரன்னுக்கு அந்த அணி 6 விக்கெட்டுகளை தாரைவார்த்தது.

டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவின் மோசமான பின்வரிசை சீர்குலைவுகளில் ஒன்றாக இது வர்ணிக்கப்படுகிறது. இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டும் கைப்பற்றினர். அடுத்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா மீண்டும் சொதப்பியது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 60.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்து மொத்தம் 75 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 64 ரன் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

சிறிய இலக்கை நோக்கி 3-வது நாளில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, முதல் ஓவரிலேயே கவாஜாவின் விக்கெட்டை பறிகொடுத்தது. ஆனால், அடுத்து வந்த லபுஷேனும், ஹெட்டும் அபாரமாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியில் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடிக்கிறது.

இந்நிலையில் இந்தூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டதற்கு பேட்ஸ்மேன்களின் மோசமான செயல்பாடு காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'கவனக்குறைவாகவும், அதிக நம்பிக்கையுடனும் செயல்படும் போது இதுபோன்ற சரிவுகளை ஆட்டத்தில் சந்திக்க நேரிடும். இந்த சூழலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற அதிக ஆர்வத்துடன் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆட முயற்சித்த சில ஷாட்கள் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது' என்றார்.


Next Story