உலகக்கோப்பை கிரிக்கெட்; நெதர்லாந்தை 160 ரன்களில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!


உலகக்கோப்பை கிரிக்கெட்; நெதர்லாந்தை 160 ரன்களில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
x

image courtesy; twitter/@BCCI

தினத்தந்தி 12 Nov 2023 4:19 PM GMT (Updated: 13 Nov 2023 2:34 AM GMT)

உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைந்தன.

பெங்களூரு,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில், இந்தியா - நெதர்லாந்து அணிகள் விளையாடின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்களை குவித்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 61, சுப்மன் கில் 51, விராட் கோலி 51, ஸ்ரேயாஸ் ஐயர் 128, கேஎல் ராகுல் 102 ரன்கள் எடுத்தனர். நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீடே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 411 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 47.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நெதர்லாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தோல்வியே சந்திக்காமல் அரையிறுதியில் விளையாட உள்ளது.

நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக தேஜா நிடமானுரு 54 ரன்களும், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 45 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

அடுத்ததாக இந்திய அணி அரையிறுதி சுற்றில் வரும் 15ஆம் தேதி நியூசிலாந்து அணியுடன் மோத உள்ளது.


Next Story