சென்னையில் எஸ்.டி.ஏ.டி. மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி


சென்னையில் எஸ்.டி.ஏ.டி. மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி
x
தினத்தந்தி 11 Jun 2019 11:12 PM GMT (Updated: 11 Jun 2019 11:12 PM GMT)

சென்னையில் எஸ்.டி.ஏ.டி. மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை ஜெர்மனி கால்பந்து பயிற்சியாளர் கற்றுக்கொடுத்தார்.

சென்னை,

சென்னையில் எஸ்.டி.ஏ.டி. மாணவ, மாணவிகளுக்கு ஜெர்மனி பயிற்சியாளர் மெல்பம் கால்பந்து பயிற்சி அளித்தார்.

சென்னையில் உள்ள ஜெர்மனி நாட்டு துணைத்தூதரகம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள இளம் வீரர், வீராங்கனைகளுக்கு 3 நாட்கள் சிறப்பு கால்பந்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் நாள் பயிற்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி.) விடுதியில் தங்கி படிக்கும் 339 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஜெர்மனி நாட்டின் பெண் கால்பந்து பயிற்சியாளர் வில்ட்ரட் மெல்பம் கால்பந்தில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுத்தார். பந்தை ‘டிரிப்லிங்’ செய்வது எப்படி? வேகமாக ஓடும் போது பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எப்படி? எதிரணியை தந்திரமாக ஏமாற்றுவது எப்படி? உள்ளிட்ட விஷயங்களை ஆர்வமாக சொல்லிகொடுத்தார். எஸ்.டி.ஏ.டி. பயிற்சியாளர்களும் அவரிடம் இருந்து கால்பந்து நுணுக்கங்களை கேட்டறிந்தனர்.

ஜெர்மனியில் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி உள்ள மெல்பம், அங்கு கிளப் வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்த அனுபவசாலி ஆவார். ஏற்கனவே சீனா, இலங்கை, ஜோர்டான் நாடுகளில் பயிற்சி கொடுத்துள்ள மெல்பம், இந்தியாவிலும் இளம் கால்பந்து வீரர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த பணியை தொடர்ந்துள்ளார்.

முதல் நாள் பயிற்சியை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டதுடன், மெல்பமின் பணியை வெகுவாக பாராட்டினார். நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான ஜெர்மனியின் துணை தூதர் காரின் ஸ்டொல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலாளர் சந்திரசேகர் சாகாமுரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

2-வது நாள் கால்பந்து பயிற்சி முகாம் சென்னை நேரு பார்க்கில் இன்று பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.


Next Story