சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதிப்போட்டிக்கு பி.எஸ்.ஜி. அணி முன்னேற்றம்


சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதிப்போட்டிக்கு பி.எஸ்.ஜி. அணி முன்னேற்றம்
x
தினத்தந்தி 20 Aug 2020 12:51 AM GMT (Updated: 20 Aug 2020 12:51 AM GMT)

சாம்பியன்ஸ் லீக்கில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைத்தது பி.எஸ்.ஜி. அணி.

லிஸ்பன்,

கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த அரை இறுதி ஆட்டத்தில் பி.எஸ்.ஜி. எனப்படும் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) அணியும், ஆர்.பி.லெப்ஜிக் (ஜெர்மனி) அணியும் மோதின. பந்தை கட்டுப்பாட்டில் (58 சதவீதம்) வைத்திருப்பதிலும், பந்தை கடத்திச்சென்று கோல் நோக்கி துல்லியமாக அடிப்பதிலும் பி.எஸ்.ஜி. அணி வெகுவாக ஆதிக்கம் செலுத்தியது. 6-வது நிமிடத்தில் பி.எஸ்.ஜி. வீரர் நெய்மார் நெருக்கமாக வந்து அடித்த பந்து கம்பத்தில் பட்டு மயிரிழையில் நழுவியது.

அதைத் தொடர்ந்து 13-வது நிமிடத்தில் கிடைத்த பிரிகிக் வாய்ப்பில் உதைக்கப்பட்ட பந்தை பி.எஸ்.ஜி. வீரர் மர்கியூனோஸ் தலையால் முட்டி வலைக்குள் தள்ளினார். தொடர்ந்து பி.எஸ்.ஜி. வீரர்கள் ஏஞ்சல் டி மரியா (42-வது நிமிடம்), ஜூவான் பெர்னட் வெலஸ்கோ (56-வது நிமிடம்) ஆகியோரும் கோல் போட்டு அசத்தினர். லெப்ஜிக் அணியால் கடைசி வரை ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை. இறுதியில் பி.எஸ்.ஜி. அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் லீக்கில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைத்தது. பி.எஸ்.ஜி. அணி வருகிற 23-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் பேயர்ன் முனிச் அல்லது லயன் ஆகிய அணிகளில் ஒன்றை சந்திக்கும்.

Next Story