சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; இறுதிப்போட்டியில் கேரளா - மேற்கு வங்கம் பலப்பரிட்சை!


சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; இறுதிப்போட்டியில் கேரளா - மேற்கு வங்கம் பலப்பரிட்சை!
x
தினத்தந்தி 30 April 2022 9:03 AM GMT (Updated: 30 April 2022 9:03 AM GMT)

இறுதி ஆட்டத்தில், இவ்விரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் களம் கண்டுள்ளன

திருவனந்தபுரம்,

75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள், கேரள மாநிலம் மலப்புரத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

2 ஆண்டுகளுக்கு பிறகு சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

அதன்படி, கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் மணிப்பூர் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

மலப்புரம் மஞ்சேரி பய்யநாடு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில், கேரளா - கர்நாடகா அணிகள் பலப்பரிட்சை நடத்தின.முதலாவது அரையிறுதி போட்டியில், கேரளா 7-3 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை அபாரமாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. உள்ளூர் வீரரான டிகே ஜெசின் அபாரமாக ஆடி, 5 கோல்கள் அடித்து கேரள அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில், மேற்கு வங்கம் - மணிப்பூர் அணிகள் களம் கண்டன. இரண்டாவது அரையிறுதி போட்டியில், மேற்கு வங்கம் 3-0 என்ற கோல் கணக்கில் மணிப்பூர் அணியை அபாரமாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இதன்மூலம், 75-வது சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில், 32 முறை கோப்பையை கைப்பற்றியிருக்கும் மேற்கு வங்க அணி, கேரள அணியை எதிர்கொள்ள உள்ளது. முன்னதாக நடைபெற்ற குரூப்-ஏ பிரிவு ஆட்டத்தில் மேற்கு வங்க அணியை கேரளா வீழ்த்தியிருந்தது. 

இதற்கு முன் சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில், இவ்விரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் களம் கண்டுள்ளன.அதில் கடைசியாக இவ்விரு அணிகளும் மோதிய 2017-18ம் ஆண்டு சந்தோஷ் கோப்பை இறுதிப்போட்டியில் கேரளா வெற்றி பெற்றது. 

கேரள அணி முதன்முறையாக 1973ம் ஆண்டு சந்தோஷ் கோப்பையை வென்றிருந்த போது, அதில் முக்கிய புள்ளியாக திகழ்ந்த கால்பந்து வீரர் பி தேவானந்த் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அதன் பின் 6 முறை கோப்பையை கைப்பற்றியிருக்கிறது கேரள அணி. கேரள அணி கடைசியாக 2017-18 சந்தோஷ் கோப்பையை வென்றிருந்தது. இதனால் இம்முறை கோப்பையை வெல்ல அதிக முனைப்பு காட்டும்.

இறுதிப்போட்டி திங்கள்கிழமை அன்று மலப்புரம் மஞ்சேரி பய்யநாடு மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.

Next Story