தெற்காசிய கால்பந்து போட்டி: இந்தியா-குவைத் அணிகள் இன்று மோதல்


தெற்காசிய கால்பந்து போட்டி: இந்தியா-குவைத் அணிகள் இன்று மோதல்
x

கோப்புப்படம்

தெற்காசிய கால்பந்து போட்டி தொடரில் ‘ஏ’ பிரிவில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பெங்களூரு,

14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இந்த போட்டி தொடரில் 'ஏ' பிரிவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

உலக தரவரிசையில் 101-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான் (4-0), நேபாளம் (2-0) ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி அரைஇறுதியை எட்டியது. இதேபோல் தரவரிசையில் 143-வது இடம் வகிக்கும் குவைத் அணி தனது முதல் 2 ஆட்டங்களில் நேபாளம் (3-1), பாகிஸ்தான் (4-0) அணிகளை தோற்கடித்து அரைஇறுதியை உறுதி செய்தது.

'ஏ' பிரிவில் முதலிடத்தை பிடிப்பது யார்? என்பதை நிர்ணயிக்கும் இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு நிச்சயம் கடுமையான சோதனை காத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு அழைப்பின் பேரில் வந்திருக்கும் வலுவான குவைத் அணி தனது உத்வேத்தை தொடர முழுபலத்தையும் வெளிப்படுத்தும்.

இந்திய அணியின் தடுப்பு ஆட்டம் சிறப்பாக இருந்தாலும், பலம் பொருந்திய குவைத்தின் சவாலை சமாளிக்க நடுகள, முன்கள வீரர்கள் இன்னும் நன்றாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி இதுவரை 4 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். கோல் அடிக்கும் விஷயத்தில் அவரையே அதிகம் இந்திய அணி நம்பி இருக்கிறது. மற்ற வீரர்களும் கோல் அடிப்பதில் கூடுதல் முனைப்பு காட்டினால் வலுசேர்க்கும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 2 ஆட்டங்களில் குவைத்தும், ஒரு ஆட்டத்தில் இந்தியாவும் வென்று இருக்கின்றன. இன்று சந்திப்பது 4-வது முறையாகும்.

முன்னதாக மாலை 3.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நேபாளம் (ஏ பிரிவு) அணிகள் மோதுகின்றன.


Next Story