பெண்கள் உலக ஆக்கி தொடர்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி


பெண்கள் உலக ஆக்கி தொடர்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 18 Jun 2019 9:30 PM GMT (Updated: 18 Jun 2019 8:51 PM GMT)

பெண்கள் உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடந்து வருகிறது.

ஹிரோஷிமா, 

பெண்கள் உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். ஒவ்வொரு பிரிவிலும் 2–வது, 3–வது இடம் பிடிக்கும் அணிகள் மற்ற பிரிவில் 2–வது, 3–வது இடம் பெறும் அணியுடன் ஒரு முறை மோதும். இதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரில் நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9–வது இடத்தில் உள்ள இந்திய அணி, 44–வது இடத்தில் இருக்கும் பிஜி அணியை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 11–0 என்ற கோல் கணக்கில் பிஜியை எளிதில் தோற்கடித்து தொடர்ச்சியாக 3–வது வெற்றியை பதிவு செய்து தனது பிரிவில் முதலிடம் பிடித்தது. அத்துடன் இந்திய அணி நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்திய அணியில் குர்ஜித் கவுர் 4 கோலும், மோனிகா மாலிக் 2 கோலும், லால்ரெம்சியாமி, ராணி ராம்பால், வந்தனா கட்டாரியா, லிலிமா மின்ஸ், நவ்னீத் கவுர் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 4–1 என்ற கோல் கணக்கில் உருகுவேயையும், 2–வது ஆட்டத்தில் 5–0 என்ற கோல் கணக்கில் போலந்தையும் வீழ்த்தி இருந்தது.


Next Story