புரோ லீக் ஆக்கி: நெதர்லாந்தை மீண்டும் வீழ்த்தியது இந்தியா


புரோ லீக் ஆக்கி: நெதர்லாந்தை மீண்டும் வீழ்த்தியது இந்தியா
x
தினத்தந்தி 19 Jan 2020 11:38 PM GMT (Updated: 19 Jan 2020 11:38 PM GMT)

புரோ லீக் ஆக்கி போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்தை மீண்டும் வீழ்த்தியது.

புவனேசுவரம்,

முன்னணி 9 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது புரோ லீக் ஆக்கி போட்டி பல்வேறு நாடுகளில் நடக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும்.

ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் 3-ம் நிலை அணியான நெதர்லாந்தை தோற்கடித்து முழுமையாக 3 புள்ளிகளை பெற்றது. இந்த நிலையில் அந்த அணியை நேற்று இந்தியா மீண்டும் எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் பின்தங்கிய இந்தியா கடைசி 10 நிமிடங்களில் எழுச்சி பெற்றது. மன்தீப்சிங் (51-வது நிமிடம்), ருபிந்தர்சிங் (55-வது நிமிடம்) ஆகியோர் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்கி, ஆட்டத்தை 3-3 என்ற கோல் கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தனர். வழக்கமான நேரத்தில் ஆட்டம் சமன் ஆனதால் முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி 2 புள்ளிகளை தட்டிச்சென்றது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் உலக சாம்பியன் பெல்ஜியத்துடன் இதே மைதானத்தில் அடுத்த மாதம் 8 மற்றும் 9-ந்தேதிகளில் மோதுகிறது.

Next Story