ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன்: உலக சாம்பியனை வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார், சிந்து


ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன்: உலக சாம்பியனை வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார், சிந்து
x
தினத்தந்தி 16 March 2018 8:45 PM GMT (Updated: 16 March 2018 8:37 PM GMT)

ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.

பர்மிங்காம்,

ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 3–ம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து (இந்தியா), உலக சாம்பியனும் தரவரிசையில் 6–வது இடம் வகிப்பவருமான நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) எதிர்கொண்டார். எதிர்பார்த்தது போலவே இந்த ஆட்டத்தில் முதல் கேமில் இருந்தே விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது. முதல் செட்டை மயிரிழையில் நழுவ விட்ட சிந்து, அதன் பிறகு அடுத்த 2 செட்டுகளில் சரிவில் இருந்து போராடி மீண்டார். 1 மணி 24 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் பி.வி.சிந்து 20–22, 21–18, 21–18 என்ற செட் கணக்கில் ஒகுஹராவை சாய்த்தார். இதன் மூலம் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் அவரிடம் அடைந்த தோல்விக்கு சிந்து பழிதீர்த்து கொண்டார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் 2–வது சுற்றில் இந்திய வீரர் பிரனாய் 21–10, 21–19 என்ற நேர் செட்டில் டாமி சுகிர்டோவை (இந்தோனேஷியா) துவம்சம் செய்து கால்இறுதிக்கு முன்னேறினார். அதே சமயம் மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 11–21, 21–15, 20–22 என்ற செட் கணக்கில் ஹூவாங் யூசியாங்கிடம் (சீனா) வீழ்ந்தார்.


Next Story