ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து போராடி தோல்வி


ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து போராடி தோல்வி
x
தினத்தந்தி 18 March 2018 9:00 PM GMT (Updated: 18 March 2018 8:38 PM GMT)

ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்தது.

பர்மிங்காம்,

ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு அரைஇறுதியில் 3–ம் நிலை நட்சத்திரமான பி.வி.சிந்து (இந்தியா), உலக தரவரிசையில் 2–வது இடம் வகிக்கும் அகானே யமாகுச்சியுடன் (ஜப்பான்) மல்லுகட்டினார். இருவரும் சரிசம பலத்துடன் மட்டையை சுழட்டியதால் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் விறுவிறுப்பாக நகர்ந்தது. முதல் இரு செட்டுகளில் இருவரும் தலா ஒன்று வீதம் கைப்பற்றிய நிலையில், கடைசி செட்டிலும் இருவரும் மாறி மாறி புள்ளிகளை சேர்த்ததால் பரபரப்பு எகிறியது. ஒரு கட்டத்தில் 18–18 என்று சமநிலையும் வந்தது. அதன் பிறகு அடுத்த 3 கேம்களை யமாகுச்சி தொடர்ச்சியாக வசப்படுத்தி சிந்துவின் போராட்டத்துக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்தார். 1 மணி 19 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் 20 வயதான யமாகுச்சி 19–21, 21–19, 21–18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். சிந்துவின் தோல்வியின் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

நூற்றாண்டு கால பழமை வாய்ந்த இந்த பேட்மிண்டன் தொடரில் இதுவரை எந்த இந்திய வீராங்கனைகளும் பட்டம் வென்றதில்லை. 22 வயதான பி.வி.சிந்து கூறுகையில், ‘இது எனக்குரிய நாளாக அமையவில்லை. நான் எனது 100 சதவீத திறமையை வெளிக்காட்டினேன். விளையாட்டில் ஏற்றம் இறக்கம் இருப்பது சகஜம். மூன்று செட்டுகள் ஆடுவது எளிதான வி‌ஷயம் அல்ல. ஆனால் இறுதியில் 2–3 புள்ளிகள் வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது. இந்த போட்டியின் மூலம் நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறேன். வலுவான வீராங்கனையாக மீண்டு வருவேன்’ என்றார்.

நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் அகானே யமாகுச்சி, ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்குடன் (சீனத் தைபே) பலப்பரீட்சை நடத்தினார். இதில் தாய் ஜூ யிங் 22–20, 21–13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றார்.


Next Story