துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 19 March 2019 10:15 PM GMT (Updated: 19 March 2019 7:44 PM GMT)

2-வது மும்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் பங்கேற்கிறார்.

* 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கமும், 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் 2016-ம் ஆண்டில் நார்சிங் யாதவுடன் ஏற்பட்ட தகுதி தேர்வு பிரச்சினை காரணமாக அந்த ஆண்டில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. அடுத்த ஆண்டு (2020) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்காக தன்னை தயார்படுத்தி வரும் சுஷில்குமார் அளித்த ஒரு பேட்டியில், ‘எனது பயிற்சியை மீண்டும் தொடங்கி இருக்கிறேன். என்னுடைய ஆட்ட பாணியில் உள்ள குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுத்து வருகிறேன். எனது கவனம் எல்லாம் ஒலிம்பிக் தகுதி சுற்றில் தான் இருக்கிறது. இந்த ஆண்டு நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன். ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே எனது இலக்கு’ என்று தெரிவித்தார்.

* 6 அணிகள் இடையிலான 5-வது தெற்காசிய பெண்கள் கால்பந்து போட்டி நேபாளத்தில் உள்ள பிராத்நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று (புதன்கிழமை) பிற்பகலில் நடைபெறும் 2-வது அரைஇறுதிப்போட்டியில் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இந்திய அணி லீக் ஆட்டங்களில் 6-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவையும், 5-0 என்ற கோல் கணக்கில் இலங்கையும் வீழ்த்தியது. வங்காளதேச அணி லீக் ஆட்டம் ஒன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் பூட்டானை தோற்கடித்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் நேபாளத்திடம் தோல்வி கண்டது. முன்னதாக நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் நேபாளம்-இலங்கை அணிகள் சந்திக்கின்றன.

* ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கடந்த ஒரு வாரமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். வருகிற 23-ந் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் பங்கேற்கும் விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர் நாளை (வியாழக்கிழமை) சென்னை வருகிறார்கள்.

* 2-வது மும்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் பங்கேற்கிறார். சீனியர் போட்டியில் முதல்முறையாக அர்ஜூன் தெண்டுல்கர் கலந்து கொள்வது குறித்து தெண்டுல்கரிடம் கேட்ட போது கூறுகையில், ‘விளையாட்டில் எதுவும் உத்தரவாதம் கிடையாது. எனவே எந்தவொரு வாய்ப்பு கிடைத்தாலும் அதனை சரியான பயன்படுத்தி கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இது ஒரு அடித்தளம். நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் உயர்ந்த நிலையை எட்டலாம். கிரிக்கெட்டில் ஏற்றம், இறக்கம் இருக்கத்தான் தான் செய்யும். ஆனால் ஆட்டத்தின் மீதான ஆர்வமும், வேட்கையும் குறையக்கூடாது. அது தான் முக்கியம். அர்ஜூன் தனது இலக்கை அடைவதற்கான காரணத்தை கண்டறிவதுடன், அந்த இலக்கை எட்டுவதற்கு ஒவ்வொரு நாளும் முயற்சிக்க வேண்டும். எதனை பற்றியும் கவலைப்படாமல் எந்தவொரு போட்டிக்கும் நேர்மறையாக தயாராக வேண்டும். அணியின் சிறந்த வீரராகவும், மனிதநேயம் மிக்கவராகவும் செயல்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்’ என்று தெரிவித்தார்.


Next Story