துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 25 March 2019 10:39 PM GMT (Updated: 25 March 2019 10:39 PM GMT)

இங்கிலாந்தில் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஆடம் கிரிப்த் நியமிக்கப்பட்டுள்ளார்.


* ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கான (யூரோ) தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இஸ்ரேல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை தோற்கடித்தது. இஸ்ரேல் வீரர் எரான் ஜாஹவி ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார். மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணி 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் சைபிரஸ்சையும், வடக்கு அயர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெலாரசையும் தோற்கடித்தன.

* ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை அடிப்படையாக கொண்டு உத்தரபிரதேச மாநிலம் முஜாபர்நகர் மாவட்டத்தில் உள்ள வாஹெல்னா சோக் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 செல்போன் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

* இங்கிலாந்தில் மே 30-ந் தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் முதல்தர வேகப்பந்து வீச்சாளரான 41 வயது ஆடம் கிரிப்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கும் முதல் தர வீரரான 53 வயது டிராய் கூலே ஜூலை மாதம் நடைபெறும் ஆஷஸ் தொடர் முடியும் வரை அணியினருடன் தொடர்ந்து நீடிப்பார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

* வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு அணியின் முன்னாள் மானேஜர் ரிக்கி கெர்ரிட், கடந்த 6 வருடங்களாக தலைவர் பதவியில் இருந்த டேவ் கேமரூன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ரிக்கி கெர்ரிட் 8-4 என்ற வாக்குகள் கணக்கில் வெற்றி பெற்று புதிய தலைவர் ஆனார். துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் கிஷோர் ஷாலோ 4 வாக்குகள் வித்தியாசத்தில் இம்மானுவேல் நந்தனை தோற்கடித்து புதிய துணைத்தலைவர் ஆனார்.

* ஒலிம்பிக் மற்றும் உலக குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரரான விஜேந்தர்சிங் 2015-ம் ஆண்டு முதல் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார். தனது முதல் 10 தொழில்முறை பந்தயங்களில் தோல்வியை சந்திக்காத விஜேந்தர்சிங் அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்த குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தயாராகி வந்தார். இதற்காக பயிற்சியில் ஈடுபட்ட போது அவருக்கு இடது கண்ணில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. இதனால் விஜேந்தர்சிங்கின் பந்தயம் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

* மொத்தம் ரூ.2½ கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. முன்னணி வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக சாய்னா நேவால் இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, சாய் பிரனீத், குரு சாய்தத், அஜய் ஜெயராம், பிரனாய், காஷ்யப் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

* 12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் போட்டி ஜூலை 19-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் மொத்தம் 29 வீரர்களை தக்க வைத்து இருப்பதாக போட்டி அமைப்பு குழு நேற்று அறிவித்துள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி அஜய் தாகூர், மஞ்சித் ஷில்லார் ஆகிய 2 வீரர்களை தக்க வைத்து இருக்கிறது. வீரர்கள் ஏலம் மும்பையில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 8 மற்றும் 9-ந் தேதிகளில் நடைபெறுகிறது.


Next Story