பசிபிக் டென்னிஸ்: பியான்கா விலகல்


பசிபிக் டென்னிஸ்: பியான்கா விலகல்
x
தினத்தந்தி 13 Sep 2019 11:30 PM GMT (Updated: 13 Sep 2019 11:30 PM GMT)

பசிபிக் டென்னிஸ் போட்டியில் இருந்து பியான்கா விலகி உள்ளார்.

பசிபிக் டென்னிஸ்: பியான்கா விலகல்

பான் பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை மறுதினம் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இருந்த 5-ம் நிலை வீராங்கனையும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா) வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். இதே போல் காயத்தால் அவதிப்படும் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து), மார்க்கெட்டா வோன்ட்ரோசோவா (செக்குடியரசு) ஆகியோரும் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.



 
ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா வேதனை

இந்திய நட்சத்திர ஸ்குவாஷ் வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்த தீபிகா பலிக்கல் நேற்று டெல்லியில் அளித்த ஒரு பேட்டியில், ‘ஸ்குவாஷ் விளையாட்டை மேம்படுத்த வேண்டும் என்று நீங்கள் (இந்திய ஸ்குவாஷ் சம்மேளனம்) விரும்பினால், முதலில் பயிற்சியாளர் ஒருவர் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டில் பயிற்சியாளர் இல்லாமல் விளையாடியது வினோதமாக இருந்தது. இந்திய ஸ்குவாஷில் நடக்கும் விஷயங்களை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது’ என்றார். தேசிய ஸ்குவாஷ் பயிற்சியாளராக இருந்த அச்ராப் எல் கரர்குய் (எகிப்து) கடந்த ஆண்டு ஏப்ரலில் ராஜினாமா செய்த பிறகு புதிய பயிற்சியாளர் யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் மீண்டும் ஸ்டிராஸ்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆன்ட்ரூ ஸ்டிராஸ் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை இருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவி ரூத்தை கவனிப்பதற்காக பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் மனைவியின் மறைவுக்கு பிறகு சிறிது காலம் ஓய்வில் இருந்த ஸ்டிராஸ் மீண்டும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் நுழைகிறார். அவர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்குரிய கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டின் செயல்பாட்டை கண்காணித்து அதை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்வது தான் அவரது முக்கிய பணியாகும்.



 

சிக்சர் மழை பொழிந்த கார்ன்வால்

கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த கிறிஸ் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா தல்வாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 171 ரன்கள் இலக்கை செயின்ட் லூசியா சோக்ஸ் அணி 16.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. செயின்ட் லூசியா ஆல்-ரவுண்டர் ரகீம் கார்ன்வால் 30 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சருடன் 75 ரன்கள் விளாசினார். 140 கிலோ எடை கொண்ட கார்ன்வால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக எடை கொண்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story