ஆசிய மல்யுத்தம்: இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்று சாதனை


ஆசிய மல்யுத்தம்: இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்று சாதனை
x
தினத்தந்தி 18 Feb 2020 11:00 PM GMT (Updated: 18 Feb 2020 10:03 PM GMT)

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.

புதுடெல்லி,

 ‘கிரிகோ ரோமன்’ 87 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுனில் குமார், கிர்கிஸ்தான் வீரர் அஜாத் சாலிடினோவை சந்தித்தார். அபாரமாக செயல்பட்ட சுனில் குமார் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். முன்னதாக சுனில்குமார் அரைஇறுதியில் அஜாமத் குஸ்துபயேவுக்கு எதிராக (கஜகஸ்தான்) 1-8 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் மீண்டெழுந்து 12-8 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.

ஆசிய மல்யுத்த போட்டியில் கிரிகோ ரோமன் பிரிவில் இந்திய வீரர் ஒருவர் தங்கப்பதக்கம் வெல்வது கடந்த 27 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். கடைசியாக 1993-ம் ஆண்டு பப்பு யாதவ் தங்கம் வென்று இருந்தார். சுனில்குமார் கடந்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

55 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் அர்ஜூன் ஹலாகுர்கி 7-4 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் டோங்யோக் வானை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் பெற்றார். 130 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் மெஹர் சிங் 1-9 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் மின்செக் கிம்மிடம் தோல்வி அடைந்தார்.

ஆசிய மல்யுத்த போட்டியில் பங்கேற்றுள்ள ஜப்பான், தென்கொரியா மற்றும் சீன தைபேவை சேர்ந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகள் முககவசம் அணிந்தபடி தங்கள் பந்தயங்களில் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தல் மற்றும் டெல்லியில் நிலவும் காற்று மாசு ஆகியவற்றுக்கு பயந்து வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முககவசம் அணிந்து போட்டியில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

Next Story