ஒலிம்பிக் தொடக்க விழாவில் மேரிகோம், மன்பிரீத் சிங் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்கள்


ஒலிம்பிக் தொடக்க விழாவில் மேரிகோம், மன்பிரீத் சிங் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்கள்
x
தினத்தந்தி 5 July 2021 10:46 PM GMT (Updated: 5 July 2021 10:46 PM GMT)

ஒலிம்பிக் தொடக்க விழாவில் மேரிகோம், மன்பிரீத் சிங் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்கள்.

புதுடெல்லி,

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியின் கோலாகலமான தொடக்க விழாவில் அணிவகுத்து செல்லும் இந்திய அணிக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்பீரித் சிங் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்வார்கள் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அறிவித்தது. நிறைவு விழாவில் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா இந்திய அணிக்கு தலைமை ஏற்று தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு அணிக்கு ஒருவர் தான் தலைமை தாங்கி வழிநடத்துவார். தொடக்க விழாவில் பாலின பாகுபாடு இன்றி இருபாலரும் அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியேந்தி செல்ல வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கடந்த ஆண்டு முடிவு எடுத்ததை அடுத்து அணிக்கு வீரர், வீராங்கனை இணைந்து தலைமை தாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு தலைமை தாங்கும் கவுரவத்தை பெற்று இருக்கும் 6 முறை உலக சாம்பியனான 38 வயது குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கருத்து தெரிவிக்கையில், ‘என்னுடைய கடைசி ஒலிம்பிக் போட்டியில் கிடைத்த மிகப்பெரிய தருணம் இதுவாகும். இதனால் நான் அதிகப்படியான உணர்ச்சியை அடையக்கூடும். அணிக்கு தலைமை தாங்கும் மிகப்பெரிய கவுரவத்துக்கு என்னை தேர்வு செய்த மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கும், இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது எனக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்கும். பதக்கம் வெல்வதற்கு எனது மிகச் சிறந்த திறனை வெளிப்படுத்துவேன்’ என்றார்.

இந்திய ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கூறுகையில், ‘வியக்கதக்க வீராங்கனையான மேரி கோமுடன் இணைந்து ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்த இருப்பதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இது அற்புதமானதாகும். இதனை விவரிக்க வார்த்தையில்லை. மேரி கோமின் வாழ்க்கை பயணம் எனக்கு எப்பொழுதும் உத்வேகம் அளிப்பதாகும். எனக்கு மட்டுமின்றி ஆக்கிக்கும் இது மிகப்பெரிய தருணமாகும். இந்த சிறந்த வாய்ப்பை அளித்த இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தொடக்க விழா அணிவகுப்பு பொறுப்பை எதிர்நோக்கி இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

Next Story