ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் நடால், ஆஷ்லி பார்ட்டி அதிர்ச்சி தோல்வி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் நடால், ஆஷ்லி பார்ட்டி அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 18 Feb 2021 12:50 AM GMT (Updated: 18 Feb 2021 12:50 AM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் ரபெல் நடால், ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர்.

மெல்போர்ன்,

மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், 8-வது இடத்தில் உள்ள சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவை சந்தித்தார்.

2 மணி 5 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் மெட்விடேவ் 7-5, 6-3, 6-2 என்ற நேர்செட்டில் ரூப்லெவை வீழ்த்தி முதல்முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். சர்வதேச போட்டியில் மெட்விடேவ் தொடர்ச்சியாக பெற்ற 19-வது வெற்றி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தரவரிசையில் 2-ம் இடம் வகிப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 6-ம் நிலை வீரரான சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார். இதில் முதல் இரு செட்களை பறிகொடுத்த சிட்சிபாஸ், பீனிக்ஸ் பறவை போல் வெகுண்டெழுந்து அடுத்த 3 செட்களையும் தன்வசப்படுத்தி அட்டகாசப்படுத்தினார். 3-வது செட்டில் டைபிரேக்கரின் ஆரம்பத்தில் நடால் வழக்கத்துக்கு மாறாக செய்த 3 தவறுகளை தனக்கு சாதகமாக்கிய சிட்சிபாஸ் ஆட்டத்தின் போக்கையும் தன்பக்கம் திருப்பினார். 4 மணி 5 நிமிடம் நீடித்த இந்த யுத்தத்தில் சிட்சிபாஸ் 3-6, 2-6, 7-6 (7-4), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி 2-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் நடாலுக்கு எதிராக முதல் 2 செட்களை இழந்து அதன் பிறகு அவரை ஒரு வீரர் வீழ்த்துவது இது 2-வது முறையாகும். அரைஇறுதியில் சிட்சிபாஸ்-மெட்விடேவ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள செக்குடியரசு வீராங்கனை கரோலினா முசோவா, ‘நம்பர் ஒன்’ நட்சத்திரமான ஆஷ்லி பார்ட்டியை (ஆஸ்திரேலியா) எதிர்கொண்டார். முதல் செட்டில் எளிதில் சரண் அடைந்த முசோவா அடுத்த 2 செட்களிலும் எழுச்சி பெற்று அபாரமாக செயல்பட்டு ஆஷ்லி பார்ட்டிக்கு அதிர்ச்சி அளித்தார். 1 மணி 57 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் முசோவா 1-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஆஷ்லி பார்ட்டியை வீழ்த்தி முதல்முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். இந்த ஆண்டில் தோல்வியை தொடாத முசோவா தொடர்ச்சியாக ருசித்த 8-வது வெற்றி இதுவாகும். முந்தைய சுற்றுகளில் கரோலினா பிளிஸ்கோவா ( செக்குடியரசு), மெர்டென்ஸ் (பெல்ஜியம்) ஆகியோரை அடுத்தடுத்து சாய்த்த முசோவா கால்இறுதி வரை ஒரு செட்டையும் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு கால்இறுதியில் தரவரிசையில் 24-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி சறுக்கலை சமாளித்து 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை ஜெசிகா பெகுலாவை விரட்டியடித்து அரைஇறுதி சுற்றை முதல்முறையாக எட்டினார். அரைஇறுதியில் ஜெனிபர் பிராடி-கரோலினா முசோவா மோதுகிறார்கள். ஊரடங்கு காரணமாக கடந்த 5 நாட்களுக்கு பிறகு இந்த போட்டியை காண நேற்று முதல் மீண்டும் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் போட்டி களைகட்டியது.

Next Story