விம்பிள்டன் டென்னிஸ்: இத்தாலி வீரர் பெரேட்டினி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை


விம்பிள்டன் டென்னிஸ்: இத்தாலி வீரர் பெரேட்டினி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை
x
தினத்தந்தி 10 July 2021 1:43 AM GMT (Updated: 10 July 2021 1:43 AM GMT)

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

லண்டன், 

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் இத்தாலி வீரர் மாட்டியோ பெரேட்டினி, 18-ம் நிலை வீரரான ஹர்காக்சுடன் (போலந்து) மோதினார். முந்தைய சுற்றில் 8 முறை சாம்பியனான ரோஜர் பெடரருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஹர்காக்ஸ், பெரேட்டினிக்கு எதிராக தடுமாற்றத்திற்கு உள்ளானார். அதிரடியான ஷாட்டுகளால் மிரள வைத்த பெரேட்டினி 6-3, 6-0, 6-7 (3-7), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக இறுதி சுற்றை எட்டியுள்ள பெரேட்டினி, விம்பிள்டன் ஒற்றையரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இத்தாலி நாட்டவர் என்ற சாதனையையும் படைத்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டியும் (ஆஸ்திரேலியா), 13-ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவும் (செக்குடியரசு) மோதுகிறார்கள். முதல்முறையாக விம்பிள்டனில் இறுதிப்போட்டிக்கு வந்துள்ள இவர்களில் ஆஷ்லி பார்ட்டி ஏற்கனவே பிரெஞ்ச் ஓபனை வென்று இருக்கிறார். ஆனால் பிளிஸ்கோவா இதுவரை எந்த கிராண்ட்ஸ்லாமும் சுவைத்ததில்லை. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story