இளைஞர்களுக்கு ஆங்கிலம், தமிழில் மொழித்திறன் வேண்டும்


இளைஞர்களுக்கு ஆங்கிலம், தமிழில் மொழித்திறன் வேண்டும்
x

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி ஏற்படவேண்டும் என்றால், வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்கள் அதிகம் வளரவேண்டும் என்ற உயரிய நோக்கில், அந்த திசையை நோக்கி தமிழக அரசு வேகமாக முயற்சிகளை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி ஏற்படவேண்டும் என்றால், வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்கள் அதிகம் வளரவேண்டும் என்ற உயரிய நோக்கில், அந்த திசையை நோக்கி தமிழக அரசு வேகமாக முயற்சிகளை எடுத்து வருகிறது. வேலைவாய்ப்புகளுக்கு தகுதியான இளைஞர்கள் வேண்டும். அத்தகைய தகுதிகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் முயற்சிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார்.

அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகத்தான் கடந்த மாதம் பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். மார்ச் 1-ந்தேதி அவருடைய பிறந்த நாளன்று, அவருடைய கனவு திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தை தொடங்கிவைத்தார். அனைத்து மாணவர்களையும் முதல்வன் ஆக்க உருவாக்கப்பட்ட திட்டம்தான் 'நான் முதல்வன்' திட்டம். மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் அனைத்து விதமான தகுதியையும் பெற்று முன்னேறி, அனைவரும் அனைத்திலும் முதலாவது வந்தார்கள் என்றநிலையை உருவாக்கவும், அனைத்து இளைஞர்களையும் கல்வியில், ஆராய்ச்சியில், சிந்தனையில், செயலில், திறமையில் சிறந்தவர்களாக மாற்றவேண்டும் என்ற உணர்வோடும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களை தகுதிப்படுத்தும் திட்டமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வடிவமைக்கப்பட்டது.

கல்வித்திறனில் முதல்வன், அறிவாற்றலில் முதல்வன், படைப்புத் திறனில் முதல்வன், பன்முக ஆற்றலில் முதல்வன், ஒருவரை மதிக்கத் தெரிந்தவன்-சமத்துவமாக நடக்கத் தெரிந்த அனைவரும் பின்பற்றும் பண்பாட்டு அடையாளம் கொண்டவன், அனைவரையும் வழிநடத்தும் தலைமைத் திறன் கொண்டவன் என்ற சிறப்புகளை ஒவ்வொரு மாணவரும் பெற்றாகவேண்டும் என்ற இலக்கை அடைய உருவாக்கப்பட்ட திட்டம் இது. அடுத்து, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 12-வது வகுப்பு படித்த மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்த திட்டம், 'கல்லூரி கனவு நிகழ்ச்சி' ஆகும்.

மாணவர்கள் அனைவரும் தாங்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், எந்த படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம்?, எதிர்கால வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கின்றன? என்று எடுத்துக்கூறி வழிகாட்டுவதற்கான வாய்ப்புதான் இந்த கல்லூரி கனவு நிகழ்ச்சி. தொடர்ந்து, கடந்த மாதம் 30-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திறன் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், அறிமுகப்படுத்தப்பட்ட 'நான் முதல்வன்' இணைய தளம் மூலம் மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவுகளை தேர்வுசெய்து பயிற்சிபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சுத்தான் மாணவர்களுக்கு நல்ல வழியைக் காட்டுவதாகவும், எதிர்காலத்தை ஒளிமிக்கதாக ஆக்குவதற்கு கொண்டு செல்வதாகவும் அமைந்துள்ளது. "தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் நம்முடைய இளைஞர்களுக்கு மொழித்திறன் இருக்கவேண்டும். தமிழ் தாய் மொழி, ஆங்கிலம் உலகத்தோடு இணைக்கும் மொழி. இந்த இரு மொழிகளிலும் எழுத, படிக்க, பேச மாணவர்களுக்கு தெரிந்து இருக்கவேண்டும். மொழி ஆற்றல் நன்றாக இருந்தால்தான் மாணவர்களின், இளைஞர்களின் வளர்ச்சியை அது வானளவுக்கு உயர்த்தும். கல்லூரி படிப்பை முடித்து வெளிவரும் கலை-அறிவியல், பொறியியல் மாணவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது ஆங்கில பேச்சாற்றல். வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போதும் சரி, வேலை கிடைத்த பிறகும் சரி இன்றைய பணிச்சூழலில் ஆங்கில பேச்சாற்றல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். மேலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியாகும் நாளேடுகளை, புத்தகங்களை தொடர்ந்து வாசியுங்கள். இதை ஒரு பழக்கமாகவே ஆக்கிக்கொளுங்கள்" என்று பேசினார்.

மாணவர்களுக்காக முதல்-அமைச்சர் தொடங்கியுள்ள திட்டங்களும், அவர் கூறிய அறிவுரைகளும் நிச்சயமாக மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பெரும் பயனளிப்பது மட்டுமல்ல, அனைவருக்கும் வேலை என்பது மட்டுமல்ல, அனைவருக்கும் தகுதியான வேலை என்ற பிரகாசமான எதிர்காலத்துக்கு கொண்டு செல்லும். அனைத்து மாணவர்களும் தமிழிலும், ஆங்கிலத்திலும் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ள திட்டங்களும், அறிவுரைகளும் அடையும் வெற்றியும், தமிழ்நாட்டின் இளைய சக்தி இணையற்ற சக்தியாக மாறுவதும், கல்வித்துறை மற்றும் மாணவர்களின் கையில்தான் இருக்கிறது.


Next Story