புத்தூர்; கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை

புத்தூர் அருகே கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து ெகாண்டார்.

Update: 2023-10-27 18:45 GMT

மங்களூரு-

புத்தூர் அருகே கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து ெகாண்டார்.

திருமணம்

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா மட்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்னூதீன். இவரது மகள் ஆயிஷா (வயது31). இவருக்கு அவரின் தந்தை மாப்பிள்ளை பார்த்து வந்தார். இந்தநிலையில் ஆயிஷாவுக்கும், பெலாலி பகுதியை சேர்ந்த சலீம் என்பவருடன் நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆயிஷாவுக்கும் சலீமிற்கும் இடையே திருமணம் நடந்தது. இந்தநிலையில், அவர்கள் 2 பேரும் ஆரம்பத்தில் சந்தோஷமாக இருந்தனர்.

இதையடுத்து, சலீம், ஆயிஷா ஆகியோர் பெங்களூருவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஆயிஷா பணியாற்றி வந்தார். அப்போது கணவர், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் சூப்பர் மார்க்கெட்டில் பணிமுடிந்து இரவு ஆயிஷா 9 மணிக்கு மேல் வந்தார். இதுகுறித்து சலீம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

சரமாரியாக தாக்கினார்

இதில், ஆயிஷாவை அவரது கணவர் சரமாரியாக தாக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து மறுநாள் காலை ஆயிஷா தனது பெற்றோர் வீட்டிற்கு மட்ணூர் சென்றார். கடந்த ஒரு மாதமாக அவர் பெற்றோர் வீட்டில் தான் தங்கி உள்ளார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் தனது வீட்டில் உள்ள கிணற்றில் குதித்து ஆயிஷா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த புத்தூர் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் ஆயிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து ஜெய்னூதீன், கணவரின் தொல்லை காரணமாக ஆயிஷா தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து புத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்