ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு

கர்நாடக மேல்-சபையில் காலியாகும் ஆசிரியர்-பட்டதாரிகள் என 4 தொகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.;

Update:2022-06-12 20:32 IST

பெங்களூரு:

நாளை ஓட்டுப்பதிவு

கர்நாடக மேல்-சபையில் காலியாகும் வடமேற்கு பட்டதாரி தொகுதி, கர்நாடக தெற்கு பட்டதாரி, கர்நாடக வடமேற்கு ஆசிரியர், கர்நாடக மேற்கு ஆசிரியர் தொகுதிகளுக்கு வருகிற 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான மனு தாக்கல் கடந்த மே மாதம் 10-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் 69 பேர் மனு தாக்கல் செய்தனர். மனுக்கள் தள்ளுபடி, வாபஸ் போக தேர்தல் களத்தில் மேல்-சபை முன்னாள் தலைவர் பசவராஜ் ஹொரட்டி உள்பட 49 பேர் போட்டியில் உள்ளனர்.

இந்த தேர்தலில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 922 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் ஆவர். இதில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 773 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 121 பேரும், பிற வாக்காளர்கள் 28 பேரும் உள்ளனர். வாக்காளர்களின் வசதிக்காக 4 தொகுதிகளிலும் 607 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 4 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

தேர்தல் அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களுடன் நேற்று மாலையே சென்றுவிட்டனர். ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்குச்சாவடிகளில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை, எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி. அடையாள அட்டை, பல்கலைக்கழகங்கள் வழங்கிய கல்வி சான்றிதழ், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

விடுமுறை

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தகுதியான வாக்காளர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் பணி பெலகாவி மற்றும் மைசூருவில் நடைபெற உள்ளன.

அதாவது கர்நாடக தெற்கு பட்டதாரி தொகுதி வாக்குகள் மட்டும் மைசூருவில் உள்ள மகாராணி பெண்கள் வணிக கல்லூரியிலும், மற்ற மூன்று தொகுதிகளின் வாக்குகள் பெலகாவியிலும் வருகிற 15-ந் தேதி எண்ணப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்