மாநிலங்களவை தேர்தலில் காங்கிரசின் கவுரவத்தை காக்கவே 2-வது வேட்பாளரை நிறுத்தினோம்: டி.கே.சிவக்குமார் பேட்டி

மாநிலங்களவை தேர்தலில் காங்கிரசின் கவுரவத்தை காக்கவே 2-வது வேட்பாளரை நிறுத்தியுள்ளோம் என்று டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.;

Update:2022-06-05 21:12 IST

பெங்களூரு:

அரசின் மனநிலை

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் அம்பேத்கர் குறித்த சில தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்தும் அம்பேத்கர் குறித்த விவரங்கள் கைவிடப்பட்டு இருக்கின்றன. ஒரு மாநில அரசு இவ்வளவு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதை நான், முன் எப்போதும் பார்த்தது இல்லை.

இந்த குழப்பங்களுக்கு பா.ஜனதா அரசே காரணம். பசவண்ணர், குவெம்பு, புத்தர், நாராயணகுரு, பகத்சிங் ஆகியோரின் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த அரசின் மனநிலை என்ன என்பது வெளிப்பட்டுள்ளது. மாநில அரசின் இத்தகைய முடிவுகளுக்கு எதிராக அனைத்து அமைப்புகளும், மடாதிபதிகளும் குரல் எழுப்ப வேண்டும். மாநிலங்களவை தேர்தலில் எங்கள் கட்சியின் 2-வது வேட்பாளருக்கு பிற கட்சியினர் மனசாட்சி மற்றும் மதசார்பின்மை கொள்கை அடிப்படையில் வாக்களிக்க வேண்டும்.

முடிவில் தலையிடவில்லை

மூத்த தலைவர் மல்லிகாா்ஜுன கார்கே, ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவாக பேசுவதாக சிலர் சொல்கிறார்கள். இது தவறானது. அவர் கட்சியின் முடிவில் தலையிடவில்லை. எங்கள் கட்சியின் கவுரவத்தை காக்கவே 2-வது வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். இதற்கு முன்பு எங்கள் கட்சியை பற்றி யார் என்ன குறைகளை கூறினர் என்பதை சற்று திரும்பி பார்த்தால் தெரியும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்