410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் - கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்

தமிழகத்தில் 410 தொடக்கப்பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்து இருக்கிறது.

Update: 2019-12-08 23:00 GMT
சென்னை,

தமிழகம் முழுவதும் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று சமீபத்தில் சென்னை கோட்டூர்புரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மேற்கொண்ட கணக்கெடுப்பில், மாநிலம் முழுவதும் 410 தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 5-க்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

மேலும் 1,531 தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக உள்ளதும் கணக்கெடுப்பில் தெரியவந்து இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளுடன் இணைப்பது பற்றி தொடக்கக்கல்வி இயக்ககம் ஆலோசித்து வருகிறது.

அடுத்த கல்வியாண்டில் (2020-21) இருந்து இந்த பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைப்பது அல்லது தற்காலிகமாக மூடுவது குறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்கும் போது, பழைய பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் இலவச போக்குவரத்து வசதி ஏற்படுத்தித்தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்