“கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது” - ஐகோர்ட்டு திட்டவட்டம்

கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.;

Update:2021-06-08 12:00 IST
“கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது” - ஐகோர்ட்டு திட்டவட்டம்
சென்னை,

கோவையைச் சேர்ந்த பூமிராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் இரண்டு பொநலமனுக்களை தாக்கல் செய்திருந்தார். அதில் ஒரு வழக்கில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிற்கு நிவாரணம் வழங்க வேண்டும், அவர்களது வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் அவர்களது குழந்தைகளின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் இன்னொரு மனுவில் கோவை சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறையாததால் அங்கு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த இரண்டு மனுக்களும் இன்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிட குழுவில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவுகளை எதிர்த்து தொடரக்கூடிய பெரும்பாலான பொதுநல வழக்குகள் விளம்பரத்துக்காகவே தாக்கல் செய்யப்படுவதாக கருத்து தெரிவித்தனர். மேலும் நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் ஏற்கனவே பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அவை நீதிமன்றத்தில் தலையீடு இல்லாமல் தொடர வேண்டும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதே சமயம் கோவை பகுதியில் தற்போது கொரோனா நிலவரம் கட்டுக்குள் இருப்பதால், தற்போது அந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் தேவைப்பட்டால் நீதிமன்றம் தாமாக வழக்கை எடுத்து விசாரிக்கும் என்றும் தெரிவித்த நீதிபதிகள், பூமிராஜ் தொடர்ந்து இரு வழக்குகளையும் முடித்து வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்